அனல் பறக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் பிரச்சாரம்… கருணாநிதியை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார் மீராகுமார்….
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமார் திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் மீரா குமார், அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று முன்தினம் சபர்மதி ஆஸ்ரமத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
நேற்று சென்னை வந்த அவர், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அப்போது பேசிய மீரா குமார், கொள்கை அடிப்படையிலேயே கட்சிகள் தன்னை ஆதரிப்பதாகவும், 17 கட்சிகள் ஒருமனதாக தன்னை வேட்பாளராக தேர்வு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.எல்.ஏக்ளும்., எம்.பி.க்களும் தங்கள் மனச்சாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கோபாலபுரம் சென்ற மீரா குமார், திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டதுடன் அவரிடம் உடல்நலம் விசாரித்தார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வரும் கருணாநிதிகடந்த மாதம் நடைபெற்ற அவரது 94 ஆவது பிறந்த நாளன்று பிரமாண்டமாக நடைபெற்ற விழாவில் கூட கலந்து கொள்ளவில்லை.
தொண்டர்கள் யாரும் கருணாநதியை சந்திக்க நேரில் வர வேண்டாம் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முக்கியமான தலைவர்கள் மட்டும் கருணாநிதியை அவ்வப்போது சந்தித்து வருகின்றனர்.