ஆகாவழி அறநிலையத்துறையை கலைங்கப்பா!: மீனாட்சி கோயில் தீ விபத்துக்குப் பின் எழும் பகீர் கோஷம்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ பற்றி எப்போதோ எரிந்து முடிந்துவிட்டது. ஆனால் சர்ச்சைகளும், விமர்சனங்களும் இன்னமும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்கின்றன.
தென்னிந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து நிகழ்ந்து, வீர வசந்தராயர் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. விபத்து நிகழ்ந்த இடத்தில் கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக ஆலய தூண்கள் அனலாய் கொதித்துக் கொண்டிருந்தன. தமிழக கோயிலில் நிகழ்ந்த இந்த விபத்து இந்தியா முழுக்க பரபரப்பை கிளப்பியுள்ளது. இதை ஆன்மிக அபசகுனமாகவே இந்துத்வ தலைவர்கள் நினைக்கிறார்கள்.
பக்தர்கள் துவங்கி பக்த பேரவையினர் வரை பலரும் இந்த விபத்துக்கு காரணமாக கோயில் நிர்வாகமாக அறநிலையத்துறையை போட்டுப் புரட்டி விமர்சித்து வருகின்றனர். அதில் சில முக்கிய நிர்வாகிகளின் குற்றச்சாட்டுகள் பகீர் கிளப்புகின்றன இப்படி...
“இந்த தீ விபத்து சம்பந்தமாக நீதி விசாரணை வேண்டும். இனி கோயிலுக்குள் எந்த கடையும் இருக்க கூடாது. அறங்காவலர் தலைவர் கருமுத்ஹு கண்ணன், இணை ஆணையாளர் உடனடியாக பதவி விலக வேண்டும். கோயிலுக்கு வி.ஐ.பிக்கள் வரும்போது மட்டும்தான் தக்கார் வருவார். மற்றபடி யாரும் அவரை சந்திக்க முடியாது. இதெல்லாம் இங்கிருக்கும் கடல் போன்ற முறைகேடுகளில் சில துளிகள்.” என்கிறார்.
மதுரை ஆதீனமோ “சிவன், பார்வதியின் கோபத்தினாலும், ஞாநிகளின் சாபத்தினாலும் இந்த விபத்து ஏற்பட்டது. பணத்தை குறியாகக் கொண்டுள்ள அறநிலையத்துறை கலைக்கப்பட்டு, செல்வந்தர்களிடம் கோயில்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.” என்கிறார். ஆனால் ஆதீனம் இப்படி பேசுவதில் சில உள்குத்துகள் இருக்கின்றன என்கிறார்கள்.
பி.ஜே.பி.யின் மாநிலச் செயலாளர் சீனிவாசனோ “வழிபாட்டுத்தலத்தை வர்த்தக தலமாக்கியதால் வந்த விளைவு இது. மீனாட்சியம்மன் கோயில் இந்த தேசத்தின் பொக்கிஷம். அங்கு ஏற்பட்டிருக்கும் சேதத்தை சாதாரணமாக சொல்லிவிட முடியாது. பக்தர்களிடம் பணத்தைப் பிடுங்குவதில்தான் ஆலய நிர்வாகம் குறியாக இருக்கிறது. கோயிலைப் பாதுகாக்க அறநிலையத்துறை தவறிவிட்டது.” என்கிறார்.
“வழிபாட்டுத்தலத்தை வியாபார இடமாக்கினால் இப்படியான சம்பவங்கள் நிகழும். ஆனால் இந்த சூழலை பயன்படுத்தி, அறநிலையத்துறையை கலைத்துவிட வேண்டும் என சிலர் கூறுவதை ஏற்க முடியாது. காரணம், அப்படி செய்தால் அந்த காலம் போல் எல்லாமே பிராமணிய மயமாகிவிடும்.” என்கிறார் பா.ம.க.வின் மாநில துணைத்தலைவர் திலகபாமா.
மதுரை மத்திய தொகுதிக்குள்தான் இந்த ஆலயம் வருகிறது. அதன் எம்.எல்.ஏ.வான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் “மிக மோசமான சம்பவம் இது. ஒரு விபத்து நடந்தால் அதை உடனே தடுக்கக் கூடிய எந்த வசதிகளும் இங்கில்லை.
நான் அது சம்பந்தமாக கற்றவன் என்பதால் இனி இது போன்று நடக்காமல் இருக்க முடிந்த ஆலோசனைகளை கூறா தயார். மற்றவர்களை விட இந்த ஆலயத்தை பற்றி பேச எனக்கு அதிக உரிமை உள்ளது.” என்று ஆன் தி வேயில் அழுத்தம் காட்டியிருக்கிறார்.