media planning to make quarrel between rajini fans and pmk

ரஜினியின் பாபா படம் கடந்த 2002 ம் ஆண்டு வெளியானது. அப்போது பாமகவுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல் எழுந்து, பின்னர் அடங்கியது.

பின்னர் 2004 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, ராமதாசுக்கு எதிராக ரஜினியின் அறிக்கையும் வெளியானது. அந்த பரபரப்புகள் அனைத்தும் எப்போதோ அடங்கி விட்டன.

அதன் பிறகு, ராமதாஸ் இல்ல திருமணத்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்ட புகைப்படங்களும் வெளியானது. ஆகவே, ரஜினிக்கும், பாமகவுக்கும் இடையே தற்போது எந்த மோதலும் இல்லை.

இந்த நிலையில், ரசிகர்களோடு ரஜினி புகைப்படம் எடுத்து கொண்டிருப்பதால், அவர் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்பது பற்றி, அவரை தவிர மற்ற அனைவரும் விவாதித்து வருகின்றனர்.

சில அரசியல் தலைவர்கள் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்கின்றனர். ஆனால், அன்புமணி, சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்கிறார்.

அது, அவரவர் தனிப்பட்ட கருத்து என்று விட்டு விடாமல், பரபரப்பான செய்திகளை வெளியிட்டு, ரேட்டிங்கை கூட்ட விரும்பும் சில ஊடகங்கள், வேறு வழி இல்லாமல், 2004 ம் ஆண்டு, ராமதாசுக்கு எதிராக ரஜினி வெளியிட்ட அறிக்கையை, தேவை இல்லாமல் மறுபதிப்பு செய்துள்ளன.

இதை உணராத பாமக இளைஞர்கள், ரஜினி, தங்கள் தலைவர் ராமதாஸை விமர்சிப்பதாக எண்ணி, வலை தளங்களில் வசை மாறி பொழிய ஆரம்பித்து விட்டனர். பின்னர் அது, பத்து வருடங்களுக்கு முற்பட்ட செய்தி என்று அறிந்து, தாமாகவே அமைதி ஆகிவிட்டனர்.

பாமக இளைஞர்கள், நெருப்பு இல்லாமலே தாமாக எரியும் பாஸ்பரஸ் என்று அறிந்தும், தேவை இல்லாமல், எதற்காக, பழைய குப்பையை கிளறி தேவை இல்லாமல் சிக்கலை உருவாக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் முகம் சுளித்து வருகின்றனர்.