தவறு செய்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

மதுரையில் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள விமான நிலையத்திற்கு இலங்கை பிரதமர் ராஜபக்சே வருவதை நாங்கள் எதிர்க்கிறோம். கடந்தமுறை ராஞ்சிக்கு ராஜபக்சே வந்தபோது 1,500 பேருடன் சென்று எதிர்ப்பு தெரிவித்திருப்போம். தற்போது எங்களால் நேரடியாக செல்ல முடியவில்லை. இதேபோல நவம்பர் 1-ஆம் தேதி லண்டனுக்கு செல்லும் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அங்குள்ள தமிழர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். 
மதிமுகவில் துரை வைகோ முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கூட்டத்தில் வாக்கெடுப்புக்கு ஓட்டுப்பெட்டி வைத்து நடத்தினோம். அதில் 106 பேரில் 104 பேர் துரை வைகோவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பொதுச்செயலாளர் ஆகிய எனக்கு நேரடியாக நியமனம் செய்யலாம் என்ற அதிகாரம் உள்ளது. அதை வைத்து நேரடியாக நியமனம் செய்திருக்கலாம். மாவட்ட செயலாளர்கள் அவருக்கு உரிய பதவி அளிக்க வேண்டும் என சொன்னதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், தனிப்பட்ட முறையில் துரை அரசியலுக்கு வருவதில் எனக்கு இப்போதும் விருப்பமில்லை. ஆனால், கட்சியினர் வரவேற்கிறார்கள். அரசியலில் விமர்சனம் வருவது சகஜம். 
லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனைகள் நடைபெற்றுள்ளன. அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் தவறு செய்திருந்தால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” என்று வைகோ தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred