MDMK General Secretary Vaiko arrested in Chennai

சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் பேரணியாக சென்ற மதிமுக பொது செயலாளர் வைகோவை போலீசார் கைது செய்துள்ளனர். 

உச்சநீதிமன்ற உத்தரவின்படி சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போராட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர். இந்த நிலையில், மெரினா கடற்கரையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை சம்பவத்தை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் மே 17 இயக்கம் உட்பட 13 இயக்கங்கள் பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்தன.

இதனை அடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், போராட்டம் எனும் பெயரில் மெரினாவில் தடையை மீறி பொதுமக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்றும், தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்ச என்ற பெயரில் மெரினாவில் ஒன்று கூடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினா, சேப்பாக்கம் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கானோர், மெரினா நோக்கி செல்ல முயன்றனர். இந்த பேரணியில் வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். பேரணியாக சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். 

அப்போது தடையை மீறி மெரினாவுக்குள் சென்ற மதிமுக பொது செயலாளர் வைகோவை போலீசார் கைது செய்தனர். பேரணியாக வந்தவர்களை கைது செய்யவும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.