மே 5 ஆம் தேதி அன்று தமிழக முழுவதும் உள்ள கடைகள் இயங்காது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிவித்துள்ளார். 

மே 5 ஆம் தேதி அன்று தமிழக முழுவதும் உள்ள கடைகள் இயங்காது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிவித்துள்ளார். திருச்சி சமயபுரத்தில் வருகிற மே 5 ஆம் தேதி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு நடைபெற உள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சமயபுரம் அருகே 52 ஏக்கரில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மாநாடு குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், தமிழக வணிகர்களின் துயரை துடைத்திட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றிடும் வகையில் மாபெரும் மாநாட்டினை வணிகர் தினமான மே 5 ஆம் தேதி நடத்திட ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றன. வருகின்ற மே 5 ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை அளித்து, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் திருச்சி தரணியில் திரள இருக்கிறார்கள்.

மாநாட்டில் பங்கேற்கும் தமிழக முதல்வரை வணிகர்கள் அனைவரும் வரவேற்று, வணிகர் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தையும், வணிகர்களின் வரலாற்றில் புதியதோர் மைல் கல்லையும் படைத்திட இருக்கிறார்கள். நடைபெற இருக்கும் 39 ஆவது மாநில மாநாடு வணிகர்களின் வரலாற்று அத்தியாயத்தில் முத்திரைப்பதித்து, ஒரு அடையாள மாநாடாக, வணிக வரலாற்றின் ஒரு திருப்பு முனையாக நிச்சயம் அமையும் என்கிற உறுதியோடு, குடும்ப விழாவாக கருதி, வணிகர்கள் குடும்பத்துடன் பங்கேற்க இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து வரும் மே மாதம் 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள கடைகள் அனைத்தும் இயங்காது என தெரிய வருகிறது. அதனை அறிக்கை மூலம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உறுதிப்படுத்தியுள்ளார்.