நடிகர் சூர்யாவை மிரட்டுவது சரியா ? பாமகவினருக்கு கேள்வி எழுப்பிய ஜி.ராமகிருஷ்ணன்
நடிகர் சூர்யாவை மிரட்டுவது கண்டனத்திற்குரியது. ஏன் இப்படி பாமகவினர் செய்கிறார்கள் என்று கண்டனத்தை தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜி. ராமகிருஷ்ணன்.
மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அதில் பேசிய அவர், 'அந்நிய ஆதிக்கம் இருக்கக் கூடாது என்பதற்காக சுதேசி கப்பலை இயக்கியவர் வ. உ சிதம்பரனார். தன்னுடைய வாழ்க்கையே விடுதலை போராட்டத்திற்காக அர்ப்பணித்தார். ஆனால் இன்று மோடி தலைமையிலான ஒன்றிய அர,சு இந்திய பொருளாதாரத்தை பன்னாட்டு கம்பெனிகளிடம் அடகு வைக்க முடிவு செய்து வருகிறது.
ரயில்வே, விமான நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைக்க கூடிய மோசமான கொள்கையை கடைபிடிக்கிறது. இத்தகைய செயல் இந்திய இறையாண்மைக்கும் மற்றும் சுதந்திரத்திற்கும் ஆபத்தாக மாறிவருகிறது. எந்த நோக்கத்திற்காக வ. உ. சி போன்ற தலைவர்கள் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டனரோ அந்த தோக்கத்தையே தற்போது ஒன்றிய அரசு சீர்குலைக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக பாஜக போராட்டம் அறிவித்துள்ளது கேலிக்குரியது ஆகும். அண்மையில் பெட்ரோல் டீசல் மீதான விலை குறைப்பை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது வெறும் கண்துடைப்பான செயலாகும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 33 ரூபாய் கலால் வரி, டீசலுக்கு 32 ரூபாய் காலால் வரி வசூல் செய்யப்படுகிறது. இதுபோக கூடுதல் வரியையும் விதித்து மக்களை சுரன்டுகிறது ஒன்றிய அரசு.
இதன் மூலம் வருடத்திற்கு 2 லட்சத்தி 87 ஆயிரம் கோடி ரூபாய் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியின் மூலம் கொள்ளை அடித்துள்ளது. ஒன்றிய அரசு உயர்த்தியுள்ள கலால் வரியை ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே பெட்ரோல் மாற்று, டீசல் ஆகியவற்றின் விலை குறையும். இதைச் செய்யாமல் மாநில அரசிடம் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க சொல்லி பிஜேபி நடத்தும் போராட்ட நாடகத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், புறக்கணிப்பார்கள்.
ஜெய் பீம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் நடித்த நடிகர் சூர்யா மீதும் இயக்குனர் மீதும் பலர் விமர்சனங்களை, மிரட்டல்களை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக இயக்குனர் பாரதிராஜா அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். சினிமா திரைத்துறையை சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.நடிகர் சூர்யாவை மிரட்டுவது கண்டனத்திற்குரியது. ஏன் இப்படி பாமகவினர் செய்கிறார்கள். சினிமாவை அதனுடைய இயல்பில் இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்' என்றார்.