Maridhas case : அடுத்த வழக்கும் ரத்து.. இன்னொரு வழக்கில் ஜாமீன்.. மாஸ் காட்டும் மாரிதாஸ்.!
இரு வழக்குகள் ரத்தான நிலையில், இன்னொரு வழக்கில் நிபந்தனை ஜாமீன் கிடைத்திருப்பதால், மாரிதாஸ் சிறையிலிருந்து விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யூடியூபர் மாரிதாஸ் மீது நிலுவையில் இருந்த ஒரு வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்னொரு வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது.
வலதுசாரி ஆதரவாளரும் யூடியூபருமான மாரிதாஸ், கடந்த 8ம் தேதி குன்னூரில் முப்படைத் தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். அவதூறாக கருத்து வெளியிட்டதாக அவர் மீது எழுந்த புகாரையடுத்து மதுரை சைபர் கிரைம் போலீசார் மாரிதாஸை கைது செய்தனர். ஆனால், இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று மாரிதாஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்து நீதிமன்றம், வழக்கை ரத்து செய்து கடந்த வாரம் உத்தரவிட்டது.
அதேவேளையில் தனியார் தொலைக்காட்சி பெயரில் போலி மின்னஞ்சல் அனுப்பிய விவகாரத்தில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருந்தார். மேலும் அவர் மீது, கடந்த கொரோனா காலத்தில் தப்லீக் ஜமாத் தொடர்பாகவும் இரு பிரிவினருக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையில் ட்விட்டரில் வீடியோ பதிவிட்டதாகவும் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்திலும் ஒரு வழக்குப் பதிவாகியிருந்தது. அந்த வழக்கிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் மேலப்பாளையத்தில் பதிந்த வழக்கையும் ரத்து செய்யக்கோரி மாரிதாஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து உயர் நீதிமன்றம், அந்த வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கிடையே போலி மின்னஞ்சல் அனுப்பிய வழக்கில், ஜாமீன் கோரி மாரிதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அந்த வழக்கில் நீதிமன்றம் மாரிதாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மாரிதாஸ் மீதான இரு வழக்குகள் ரத்தான நிலையில், இன்னொரு வழக்கில் நிபந்தனை ஜாமீன் கிடைத்திருப்பதால், மாரிதாஸ் சிறையிலிருந்து விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.