செல்லாத நோட்டு விவகாரத்தில் 112 பேர் இறந்ததற்கு மோடியே பொறுப்பு: மம்தா பானா்ஜி கடும் சாடல்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாத அறிவிப்பால், மத்திய அரசு வெளியிட்ட புதிய ரூபாய் நோட்டுகளை வங்கியில் எடுக்க வரிசையில் நின்று 112 பேர் இறந்ததற்கு, பிரதமர் நரேந்திர மோடியே காரணம் என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாக குற்றம் சாட்டினார்.

உயர் மதிப்புள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி மத்திய அரசு திரும்பப்பெறுவதாக அறிவித்தது. இந்த பிரச்சினை தொடர்பாக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வருகிறார்.

சமீபத்தில் பேட்டி அளித்த அவர் இந்த பிரச்சினைக்கு பொறுப்பு ஏற்று பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். பிரதமர், பதவி விலகக்கோரி போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில் டுவிட்டர் வலைத்தளத்தில், பிரதமர் நரேந்திர மாேடியை, மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார் மம்தா பானர்ஜி.

இது குறித்து டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில், மோடி அண்ணா, நீங்கள் மிகவும்கடுமையாக நடந்து வருகிறீர்கள். வங்கியில் பணம் எடுக்க நின்று 112 பேர் இதுவரை பலியாகி இருக்கிறார்கள். எங்கள் மாநிலத்தில் இப்போதும் ஒருவர் பலியாகி இருக்கிறார். இத்தனை பேர் சாவுக்கும் நீங்கள்தான் பொறுப்பு. உங்கள் ஆட்சியில் பொதுமக்களை பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கிறீர்கள்.

 பணத்தை எடுப்பதில் கொண்டு வந்த கட்டுப்பாடுகள் இவ்வளவு காலத்துக்கு பிறகும் நீடிப்பது ஏன்? 50 நாட்கள் கடந்த பிறகும் மக்கள் தங்கள் பணத்தை எடுப்பதற்கு ஏன் இத்தனை நிர்ப்பந்தங்களை ஏற்படுத்துகிறீர்கள்? மக்களின் பொருளாதார உரிமையை பறிப்பதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என கடுமையாக சாடியுள்ளாாா்.