பாஜகவில் இருந்த பாவத்தை போக்க பரிகாரம் செய்த திரிபுரா எம்.எல்.ஏ.. திரிபுராவில் ஆட்டத்தை தொடங்கிய மம்தா.!
திரிபுராவில் பாஜகவிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர், பாஜகவில் இருந்ததற்காக தன் பாவத்தை போக்கிக்கொள்ளும் சடங்கு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திரிபுராவில் பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சர்மா ஆசிஷ் தாஸ். இவர், பாஜகவிலிருந்து விலகி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர முடிவெடுத்தார். கொல்கத்தாவுக்கு செல்வதற்கு முன்பாக, பாவத்தைப் போக்கிக்கொள்ளும்ம் பூஜைகளைச் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது. மம்தா கட்சியில் சேருவதற்கு முன்பாக தன்னை தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக சில சடங்குகளையும் பரிகாரங்களையும் செய்தர். மொட்டை அடித்துக்கொண்ட அவர், பின்னர் கங்கை ஆற்றில் மூழ்கி கடவுளை வழிப்பட்டார்.
இதுதொடர்பாக சர்மா ஆசிஷ் தாஸ் கூறுகையில், “இவ்வளவு ஆண்டுகளாக பாஜகவில் இருந்ததற்காக இந்தப் பரிகாரத்தைச் செய்தேன். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணையும் முன், என்னை தூய்மைப்படுத்திக் கொள்ளவும் சடங்கு செய்தேன். மம்தா பானர்ஜி நாட்டின் பிரதமராக வரவேண்டும் என பொதுமக்கள் மட்டுமல்ல, பல அமைப்புகளும் விரும்புகின்றன. மம்தா வங்காளத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் பிரதமராக வருவது முக்கியத்துவம் பெறும். அரசின் சொத்துக்களை எல்லாம் மோடி அரசு தனியார் நிறுவனங்களுக்கு விற்று வருகிறது.
மோடியின் சொன்னது எல்லாம் முன்பு எல்லா தரப்பினரிடமும் ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்தியது. நான் ஊழல் செய்யமாட்டேன்; மற்றவர்களை ஊழல் செய்ய விடமாட்டேன் என மோடி பேசியதெல்லாம் இப்போது ஜோக்காக மாறிவிட்டது.” என்று சர்மா ஆசிஷ் தெரிவித்தார். திரிபுராவில் பல ஆண்டுகளாக ஆட்சி செய்த இடதுசாரிகளை வீழ்த்தி விட்டு, கடந்த 2018-இல் பாஜக ஆட்சியைப் பிடித்தது. அங்கு 2023-இல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை அங்கு திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வரும் முயற்சியில் மம்தா களமிறங்கியுள்ளார். இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ. திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு மாறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.