டெங்கு கொசு உற்பத்திக்கு மத்திய அரசே பொறுப்பாம்... சொல்கிறார் மம்தா!
மேற்கு வங்க மாநிலத்தில் டெங்கு பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்திருப்பதற்கு மத்திய அரசே காரணம் என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
டெங்கு பாதிப்பு குறித்து அறிய தலைமைச் செயலகத்தில் ஒரு கூட்டம் போட்டார் மம்தா. டெங்கு காய்ச்சல் மற்றும் அதனுடன் இணைந்த நோய்களை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறிய மம்தா, அங்கே அதிகாரிகள் மட்டத்தில் விவாதிக்கப்பட்டதில் இருந்து ஒரு முக்கிய முடிவுக்கு வந்தார். நகரில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு அருகில்தான் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாம்! எனவே, இதற்கு மத்திய அரசே பொறுப்பு என்ற தீர்மானத்துக்கு வந்துள்ளார் மம்தா பானர்ஜி.
மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு அருகில், கட்டுமானக் கழிவுகள் அதிகம் இன்னும் அப்புறப்படுத்தப் படவில்லை. அந்தப் பகுதிகளில் உள்ள கட்டுமான மிச்சங்களை அப்புறப் படுத்த உள்ளூர் நிர்வாகத்தையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று புகார் கூறும் மம்தா, பொதுமக்கள் தங்களை இதுபோன்ற இடங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் ஒரே ஒருவர் தான் டெங்குவால் உயிரிழந்துள்ளார். ஆனால், இங்கே ஏதோ டெங்குவால் உயிரிழப்புகள் நாள் தோறும்ம் அதிகரிப்பதுப்போல் வதந்திகளைப் பரப்புகிறார்கள். வதந்தி பரப்புதல் கடும் குற்றம். அண்மைக் காலங்களில் டெங்குவால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஏழு முதல் எட்டு மாதங்களில் 30 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர்... என்று கூறியுள்ளார் மம்தா.