இது அசத்தல் யோசனையா இருக்கே?... ஆண்டவர் ஐடியாவுக்கு செவி சாய்ப்பாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்...!
மாணவர்களின் உயிர் காக்கும் நோக்கத்தோடு ஆன்லைன் கல்வியை ஊக்குவிப்பது சரிதான் என்றாலும், அது அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கிடைக்கிறதா? என்பதில் பெரும் சிக்கல் நிலவிவருகிறது.
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கூட தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வழியிலாக கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் உயிர் காக்கும் நோக்கத்தோடு ஆன்லைன் கல்வியை ஊக்குவிப்பது சரிதான் என்றாலும், அது அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கிடைக்கிறதா? என்பதில் பெரும் சிக்கல் நிலவிவருகிறது.
கிராமப்புறங்களில் விளிம்பு நிலையில் உள்ள மாணவ, மாணவிகள் இணையவசதி, செல்போன் இல்லாததால் ஆன்லைன் கல்வி கற்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் தான் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஜன. 2021 முதல் ஏப். 2021 வரை கடந்த அதிமுக ஆட்சியில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும் என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்த திட்டம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வகுப்புகள் இணைய வழியிலே நடக்கும் சூழல் இருப்பதால், 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் செயல்படுத்த வேண்டும் எனும் மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. கல்வி நிலையங்கள் திறக்கும் வரை தமிழக அரசு இலவச டேட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.