தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

பழனி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விவகாரத்திலும், கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கு விவகாரத்திலும், தமிழில் குடமுழுக்கு முறையாக நடத்தப்படவில்லை.

இச்சூழலில், தமிழ் கடவுள் பழனி முருகன் கோயில் குடமுழுக்கு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை தமிழில் குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும் என, வழக்கறிஞர் தமிழ் இராசேந்தின் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

எனவே, பழனி முருகன் கோயில் கருவறை, வேள்விச்சாலை, கோபுரக்கலசம் ஆகிய இடங்களில் தமிழ் மந்திரங்களும், சமஸ்கிருத மந்திரங்களும் சம அளவில் அர்ச்சிக்கப்படும் என்பதை பொத்தாம் பொதுவாக கூறாமல், அறிக்கை வாயிலாக தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது என வேல்முருகன் கூறியுள்ளார்.