மொத்த பழியையும் மோடி மீது போட்ட உத்தவ் தாக்கரே..!! வயிற்றெரிச்சல் என விமர்சனம்..!!
ஆரம்பத்தில் மத்திய அரசு அளித்த பரிசோதனை செய்யப்பட வேண்டிய சர்வதேச பயணிகள் பட்டியலில் அமெரிக்கா மற்றும் துபாயில் இருந்து வந்தவர்களை சேர்க்கவில்லை
மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரிக்க மோடி அரசுதான் காரணம் என அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு விமான நிலையங்களில் சரியான முறையில் சோதனை நடத்தாமல் விட்டதே வைரஸ் பரவலுக்கு காரணம் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, நாட்டிலேயே கொரோனா பரவலில் மகாராஷ்டிர மாநிலமே முன்னணியில் உள்ளது, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அம்மாநில அரசு போராடி வரும் நிலையில், மராட்டிய நாளேடு ஒன்றுக்கு காணொளி மூலம் பேட்டி அளித்த அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியதாவது :- மகாராஷ்டிராவின் முதல் நோயாளி துபாயில் இருந்து வந்தவர் ஆவார்,
அப்போது காய்ச்சல் உள்ளதா இல்லையா என்பது குறித்து மட்டுமே விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டது. காய்ச்சலுடன் வருபவர்கள் முன்னெச்சரிக்கையாக மருந்து சாப்பிடுவது வழக்கமாகும், எனவே அந்த நபரை சோதனையின்போது கண்டுபிடிக்காமல் விட்டது தொற்று பரவ காரணமாகிவிட்டது, அத்துடன் ஆரம்பத்தில் மத்திய அரசு அளித்த பரிசோதனை செய்யப்பட வேண்டிய சர்வதேச பயணிகள் பட்டியலில் அமெரிக்கா மற்றும் துபாயில் இருந்து வந்தவர்களை சேர்க்கவில்லை, ஆகவே மாநில அரசு அவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் முன்பே அவர்கள் மக்களுடன் கலந்துவிட்டனர். தற்போது ஊரடங்கு நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்களை திரும்ப அனுப்பும் முடிவும் சரியானது அல்ல, அவர்களை ஊரடங்கு அறிவிக்கும் முன்பே சொந்த ஊருக்குச் செல்ல அனுமதித்து இருந்தால் இத்தனை துயரங்கள் ஏற்பட்டிருக்காது.
தற்போது கொரோனா சமூகப்பரவலை நெருங்கிவிட்டது, இனி இதை மறைத்து பொய் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை, மழைக்காலம் நெருங்கி வருவதால் அதையும் சேர்த்து சமாளிக்க வேண்டியது மிகவும் கடினமான ஒன்றாகும், நான் இதில் முன்னெச்சரிக்கையின்றி நடந்து எந்த ஒரு தவறான விளைவையும் ஏற்படுத்த விரும்பவில்லை, என்னைப் பற்றி பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர், இதைப் பார்த்தால் வயிற்றெரிச்சலும் கொரோனாவில் ஒரு அறிகுறியா என சோதிக்க வேண்டும் போல தோன்றுகிறது இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.