செம ட்விஸ்ட்... தளபதிக்கு எதிராக களமிறங்கும் டாக்டர் சரவணன்...!
சட்டப்பேரவை தேர்தலில் திமுகவில் சீட் வழங்காததால் அதிருப்தியில் இருந்த டாக்டர் சரவணன் பாஜவில் இணைந்தார். இதனையடுத்து, அவருக்கு மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சட்டப்பேரவை தேர்தலில் திமுகவில் சீட் வழங்காததால் அதிருப்தியில் இருந்த டாக்டர் சரவணன் பாஜவில் இணைந்தார். இதனையடுத்து, அவருக்கு மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன், மருத்துவரான இவர் ஆரம்ப காலத்தில் சில பொதுச் சேவைகளை தொகுதியில் செய்து வந்த நிலையில் 2013-ம் ஆண்டு மதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் 2015-ம் ஆண்டு மதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பின்னர் 2016-ல் அங்கிருந்து திமுகவுக்கு தாவினார். அங்கு அவருக்கு திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.
ஆனால், அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவருக்கு ஜெயலலிதா கைரேகை வைத்தது செல்லாது என வெற்றியை எதிர்த்து சரவணன் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு நடைபெற்று வந்த போதே ஏ.கே.போஸ் உயிரிழந்தார். மீண்டும் 2019-ம் ஆண்டு அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் சரவணனுக்கே மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு வெற்றிப்பெற்றார். தொகுதியில் வென்றாலும் திமுக நிர்வாகிகளிடையே மதிக்காமல் நடப்பது, ஒருங்கிணைப்பின்மை என பல புகார்கள் மேலிடத்திற்கு சென்றது. திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுகவின் கோட்டை, அங்குள்ள திமுக உட்கட்சி பிரச்சினை போன்றவை காரணமாக தொகுதியை மார்க்சிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கியது. மதுரை வடக்கு தொகுதியும் தளபதிக்கு ஒதுக்கப்பட்டது.
இதனால், அதிருப்தி அடைந்த சரவணன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் தன்னை மீண்டும் பாஜகவில் இணைத்து கொண்டார். திடீரென பாஜகவிற்கு தாவியதன் மூலம் அவருக்கு மதுரை வடக்கு தொகுதியில் வாய்ப்பளிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில், மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட சரவணனுக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.