காந்திக்கு மதுரை... மோடிக்கு மல்லை... போற்றிப்புகழும் ஓ.பி.ரவீந்திரநாத்..!
காந்திஜிக்கு தமிழ் கலாசாரம் தந்தது மதுரை... மோடிஜிக்கு தமிழ்கலாச்சாரத்தை தந்தது மல்லை என பிரதமர் மோடியை வானளாவ புகழ்ந்து தள்ளியுள்ளார் அதிமுக எம்.பி.ஓ.பி.ரவீந்திரநாத்.
கோவளம் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள மோடி காலையில் கடற்கரையில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது குப்பைகளை பார்த்த அவர் காலில் செருப்பின்றி, கையில் கிளவ்ஸ் இன்றி குப்பையை அள்ள ஆரம்பித்தார். இதற்கு அதிமுகவை சேர்ந்த தேனி தொகுதி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அதில், ’நீரெல்லாம் கங்கை, நிலமெல்லாம் காசி" எனும் பொன்மனம் படைத்த பிரதமரின் பொற்கரங்களால் கங்கை மட்டுமல்ல ! வங்கக்கடற்கரையும் தூய்மை ஆனது !! பாரே வியக்கும் பாரதப்பிரதமரின் செயல்களைப் போற்றி வணங்குகிறேன்’’என புகழ்ந்துள்ளார்.
முன்னதாக மோடி நேற்று வேட்டி சட்டையில் அசத்தியதற்காகவும் ஓ.பி.ரவீந்திரநாத் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார், அதில், ’’எளிமையாய் தனது பாணியிலேயே தமிழ் மண்ணில் தடம் பதித்த நமது பாரத பிரதமருக்கு கோடான கோடி வணக்கங்கள். அன்று தேசப்பிதா மகாத்மா காந்தியின் எளிய உடை மாற்றம், இன்று பிதாவின் பாதையிலே பிரதமரின் இனிய எழில்தோற்றம். வரலாறு படைக்கும் தமிழர் தோற்றத்தினை வாழ்த்தி வரவேற்கிறேன். காந்திஜிக்கு தமிழ் கலாசாரம் தந்தது மதுரை... மோடிஜிக்கு தமிழ்கலாச்சாரத்தை தந்தது மல்லை '’ என புகழ்ந்துள்ளார்.