மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழா…. பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் !!
மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜுலை 15 ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது என்றும், பிரதமர் மோடி இதில் பங்கேற்று அடிக்கல் நாட்டுவார் என்றும் தகவக்ல் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதற்காக தமிழ்நாட்டில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றை மத்திய அதிகாரிகள் குழு ஆய்வு செய்து. ஆனாலும் இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடாமலேயே இருந்தது.
தற்போது நீண்ட இழுபறிக்கும் பிறகு மதுரை தோப்பூரில் மத்திய அரசு உயர்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை அமைக்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இதற்காக தோப்பூரில் 200 ஏக்கல் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. ரூ.1,500 கோடி மதிப்பில் 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக எய்ம்ஸ் கட்டப்படுகிறது.
தென்னிந்தியாவில் முதலாவதாக அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை என்பதால் அடிக்கல் நாட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.
அடிக்கல் நாட்டு விழாவை காமராஜர் பிறந்த நாளான வருகிற 15-ந் தேதி நடத்தலாமா? என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
பிரதமர் பங்கேற்கும் தேதி விவரம் விரைவில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.