ஒபிஎஸ்சுடன் மல்லுக்கட்டும் மத்திய அமைச்சர்...! பதிலுக்கு பதில் பன்ச்...!
தமிழககம் அமைதி பூங்காவாக இல்லை என கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்ற ஒபிஎஸ்சின் கருத்துக்கு ஜமுக்காளமே கலப்படத்தில் மூழ்கியுள்ளது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதில் விமர்சனம் செய்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தமிழகம் தற்போது அமைதியாக இருப்பதாக பலர் கூறி வருவதாகவும் ஆனால் அப்படி இல்லை எனவும் தெரிவித்தார்.
பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறி உள்ளது எனவும் பலர் இங்கு ஒளிந்து கொண்டு நாசவேலையில் ஈடுபட பயிற்சி பெற்று வருகிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.
அது உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தும் அவர்கள் அரசுக்கு அறிக்கை கொடுப்பது இல்லை எனவும் அரசுக்கும் அது தெரிந்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதுஇல்லை எனவும் தெரிவித்தார்.
மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள், தமிழ்தேச தீவிரவாதிகள் உள்பட அனைத்து தீவிரவாத அமைப்புகளும் ஒன்று சேர்ந்துள்ளதாகவும் இது தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதே தெளிவாக தெரிந்தது எனவும் தெரிவித்தார்.
ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். திராவிட கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை அழித்துவிட்டனர் என குறிப்பிட்டார் பொன்னார்.
இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பயங்கரவாதிகளின் பயிற்சி மையமாக தமிழகம் மாறிவிட்டது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் எனவும் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பொன்னார், ஜமுக்காளமே கலப்படத்தில் மூழ்கியுள்ளது என பதில் விமர்சனம் செய்தார்.