என்னை ஆஜராக உத்தரவிட சி.டி.செல்வம் அமர்வுக்கு அதிகாரம் இல்லை... எமோஸ்னலாக வாய்விட்ட ஹெச்.ராஜா!
விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது தான் பேசியதை, உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது தான் பேசியதை, உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தன்னை ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது. குறிப்பிட்ட வழியில் விநாயகர் ஊர்வலம் செல்ல முயன்றபோது, உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தினர். இதனை ஏற்க மறுத்த ஹெச்.ராஜா போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் தடையையும் மீறி ஊர்வலம் நடத்தப்பட்டது. ஹெச்.ராஜா, போலீசாருடன் நடத்திய வாக்குவாதத்தில், போலீசார் மற்றும் நீதிமன்றம் குறித்து அவதூறான கருத்துக்களை கூறியிருந்தார். இந்த நிலையில், ஹெச்.ராஜா மீது, தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சிலர் முறையிட்டிருந்தனர். ஆனால், நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு தாமாக முன் வந்து விசாரிக்க மறுத்து விட்டது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்காக பதிவு செய்தால் விசாரிக்கப்படும என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், நிர்மல்குமார் அமர்வு, ஹெச்.ராஜா தொடர்பான வழக்கை தாமாக விசாரிக்க முன்வந்து விசாரிப்பதாக தெரிவித்தது. இது குறித்து 4 வாரங்களுக்குள் ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.