திமுக ஆட்சிக்கு இன்னும் 27 அமாவாசை தான் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

திமுக ஆட்சிக்கு இன்னும் 27 அமாவாசை தான் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில் தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கூறியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை அடுத்து தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது. பரபரப்பான தேர்தல் களத்தில் திமுக தலைவர்கள் அதிமுக, பாஜகை விமர்சிப்பதும் அவர்கள் இவர்களை திட்டுவதுமாக அனல் பறக்கிறது. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர்களும் பரபரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வகையில் கரூர் மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் காந்தி கிராமம் தொழிற்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்தது. அதன் மூலம் வெற்றியும் கண்டது. திமுக அரசின் சாதனை என்னவென்றால் பொங்கல் பரிசு தொகுப்பில் வெல்லத்திற்குப் பதிலாக கிரீஸை கொடுத்திருக்கிறார்கள்.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் போது, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்தல் வர உள்ளது. எனவே இன்னும் 27 அமாவாசை மட்டுமே திமுக ஆட்சி இருக்கும். அதற்கு பிறகு திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். வெறும் 3 சதவீத வித்தியாசத்தில்தான் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் அதிமுக 200 இடங்களில் வெற்றி பெறும். பொய் சொல்லியே திமுக ஆட்சியைப் பிடித்தது. ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க திமுகவினர் தயாராக இருக்கிறார்கள். பணத்தை வாங்கிக்கொண்டு அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார். விஜயபாஸ்கர் கூறியது போலவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.