பணத்த எங்ககிட்ட கொடுங்க... நாங்க மேம்படுத்திகிறோம்... - தம்பிதுரை தடாலடி...!
மத்திய பட்டியலில் இருக்கும் கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும், நவோதயா பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை மாநிலங்களுக்கு கொடுத்தால் மாநில அரசு கல்வியை மேம்படுத்தும் எனவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதனால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறுகையில், நவோதயா பள்ளி என்ற பெயரில், தமிழகத்தில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என தெரிவித்துள்ளார்.
அதேபோல், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசுகையில், நவோதயா பள்ளிகளால் தமிழகத்தில் அரசு பள்ளிகள் செயல் இழக்கும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்தியை திணிக்கவே மத்திய அரசு நவோதயா பள்ளியை கொண்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் கரூரில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய பட்டியலில் இருக்கும் கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும், நவோதயா பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை மாநிலங்களுக்கு கொடுத்தால் மாநில அரசு கல்வியை மேம்படுத்தும் எனவும் தெரிவித்தார்.