பாகிஸ்தான் வரை வந்த ஆபத்து, இந்தியாவிற்குள் நுழைகிறது..?? ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி..!!
ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு அரேபியாவைக் கடந்து ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பயணிக்கும் இந்த வெட்டுக்கிளிகள் சாதாரணமாக தம் இடப்பெயர்வை இராஜஸ்தானின் மேற்கு எல்லையோடு முடித்துவிடுவது வழக்கம்.
கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களின் விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருவது அதிர்ச்சியளிக்கிறது. உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து பத்தில் ஒரு பங்கு உலக மக்கட்தொகையை பட்டினிக்குத் தள்ளும் அளவுக்கு அவை திறன்பெற்றவை என்று National Geographic இவற்றைப்பற்றி பெரும் கவலைதரும் தகவலைப் பதிவு செய்கிறது. இந்த ஆபத்தை உலகம் எப்படிக் கையாளுகிறது?அடுத்ததாக இந்த ஆபத்தை எப்படி உலகம் எதிர்கொள்கிறது என்று பார்க்கும்போது, ஏறக்குறைய கொரோனா போன்ற கையறு நிலையே காணப்படுகிறது. இந்த வெட்டுக்கிளிகளின் விரைவான இனப்பெருக்கம், தொடர் இடபெயர்வு (migration), பெரும் பரவல் மற்றும் எண்ணிக்கையால் இவற்றைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலான ஒன்றாக இருக்கிறது.
தற்போதைய சூழலில் வானிலிருந்து தெளிக்கப்படும் வேதிப் பூச்சிக்கொல்லிகளே உலகம் முழுதும் இதற்கு தீர்வாகக் கருதப்படுகிறது. இந்திய அரசும் மாலத்தியான் எனப்படும் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் (!) தாக்கி அழிக்கும் நச்சை இந்த வெட்டுக்கிளிகளுக்கு எதிராகப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இது அதிகம் நீர்க்கப்பட்டுதான் (Ultra Low Volume) பயன்படுத்தப்படவேண்டும் என்றாலும் இதன் நச்சுத்தன்மை விவசாயத்துக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்தே அழிக்கும் என்பதோடு அதன் நச்சு நீரிலும் நிலத்திலும் கலப்பதை எந்த வகையிலும் தடுக்க முடியாது. இந்த வெட்டுக்கிளிகள் விரைவில் தொடர்ந்து இடப்பெயற்சி அடைந்து விடுவதாலும் பல சதுரகிலோமீட்டர் தொலைவுகளுக்கு இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் காணப்படுவதாலும் இந்த பூச்சிக்கொல்லித் தெளிப்பு பெரிய அளவில் பயனளிப்பதில்லை. இந்நேரத்தில் இயற்கையிலேயே பூச்சிகளை கட்டுப்படுத்தும் பறவைகள் மற்றும் விலங்குகளை நாம் பெருமளவில் ஒழித்துவிட்டதையும் வருத்தத்துடன் நினைவுகூர வேண்டியிருக்கிறது. ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு அரேபியாவைக் கடந்து ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பயணிக்கும் இந்த வெட்டுக்கிளிகள் சாதாரணமாக தம் இடப்பெயர்வை இராஜஸ்தானின் மேற்கு எல்லையோடு முடித்துவிடுவது வழக்கம்.
ஆனால் 27 ஆண்டுகளுக்குப்பிறகு இவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதை நாம் நம்முடைய உணவுப் பாதுகாப்பின் மீதான பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. இவை தமிழகத்துக்கு வராது என்று அரசு கூறினாலும் இவற்றின் இடப்பெயற்சியை சரியாக யாராலும் கணிக்கமுடியாது என்பதே அறிவியல் உண்மை. இவை தமிழகத்துக்கு வராது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது என்று பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் சொல்வதைக் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. மேலும் இதுகுறித்த பேட்டி ஒன்றில் பேராசிரியர் சுல்தான் அவர்கள், தமிழக அரசும் , விவசாயிகளும் தகுந்த முன்னேற்பாடுகளுடன் இருக்கவேண்டும் என்று குறிப்பிடுவதோடு வேதிப் பூச்சிக்கொல்லிக்கு மாற்றாகச் சில பாதுகாப்பான மாற்றுகளையும் முன்வைக்கிறார். கொரோனா விஷயத்தில் முதலில் அரசு மெத்தனமாக இருந்துகொண்டு பின்னர் கைவிரித்தது போன்றில்லாது இப்போதே நம்மிடமிருக்கும் மக்களையும் மண்ணையும் நேசிக்கும் நிபுணர்களிடம் கலந்தாலோசித்து உரிய தயாரிப்புடன் இருப்பதே விவேகமானது.
ஆபத்து நெருங்க வாய்ப்புகள் இருக்கும் நேரத்தில் எவ்வித தாமதமும் இன்றி சில சோதனை முயற்சிகளைச் செய்து முடித்துவிடுவதே விவேகமானது. காலநிலை மாற்றம். உலக வெப்பமயமாதலின் விளைவுகளை நம் தலைமுறை ஏற்கெனவே சந்திக்கத் தொடங்கிவிட்டது. உலக வெப்பமயமாதல் பூச்சிகளின் பெருக்கத்திலும் நடத்தியிலும் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் ஏற்கனெவே எச்சரித்திருக்கின்றார்கள். வரலாறு காணாத மழை, வரலாறு காணாத வெள்ளம், வரலாறு காணாத வெப்பம், வரலாறு காணாத வறட்சி, என புதிய புதிய மொழியில் இந்த பூமி மனிதனிடம் ஏதேதோ பேச முயல்கிறது. கூர்மதியுள்ள மனித சமூகமும் அதை ஆளும் வல்லரசுகளும் எப்போது பூமியின் குரலுக்குச் செவிசாய்க்கப் போகிறார்கள் என பூவுலகின் நண்பர்கள்
கேள்வி எழுப்பியுள்ளனர்.