அனைத்து வாக்குப்பதிவு நிலையங்களிலும் திமுக குண்டர்கள் சரளமாக கள்ள ஓட்டை பதிவு செய்தனர். கள்ள ஓட்டு போடுவதற்கு திமுகவினர் பணம் அளித்தனர்.

வாக்கு எண்ணிக்கையாவது தேர்தல் ஆணையம் மனசாட்சியுடன் நடத்துமா அல்லது ஆளும் கட்சிக்குத் துணைபோகும் அவலம் தொடருமா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

 தமிழகத்தில் 21 மா நகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19 அன்று தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக அதிமுக குற்றம் சாட்டி வருகிறது. கோவையில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெறுமா என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், ஆளும் திமுகவின் கோர முகத்தை வெளிப்படுத்தியது. திமுகவின் இதற்கு முந்தைய அராஜகத்தை எல்லாம் இந்தத் தேர்தல் விஞ்சி விட்டது. கொரோனா நோயாளிக்கு என்று வரையறுக்கப்பட்ட மாலை நேரம் 5 மணி முதல் 6 மணி வரை கள்ள ஓட்டுக்காக திமுகவால் திட்டமிடப்பட்டிருந்து. இதை அறிந்து, தனி நேரம் தரப்பட வேண்டாம் என தடுத்துப் பார்த்தோம். ஆனால், எதிர்பார்த்தபடி கொரோனா வைரஸ் நேரத்தை சமூக விரோத கும்பல் எடுத்துக் கொண்டன. அனைத்து வாக்குப்பதிவு நிலையங்களிலும் திமுக குண்டர்கள் சரளமாக கள்ள ஓட்டை பதிவு செய்தனர்.

கள்ள ஓட்டு போடுவதற்கு திமுகவினர் பணம் அளித்தனர். இது தொடர்பாகப் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வில்லை. மாநில தேர்தல் ஆணையம் கண்களை மூடிக் கொண்டது. சேலத்தில் இடைப்பாடி கிராமத்தில், அலச்சம்பாளையம் கிராம பள்ளியில் திமுக வேட்பாளர் கணேசன் கள்ள ஓட்டு போட வைத்தது ஜனநாயகப் படுகொலை ஆகும். இந்தச் சூழலில் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணியை வீடியோவாக எடுக்க வேண்டும். மாநிலத் தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையாவது மனசாட்சியுடன் நடத்துமா அல்லது ஆளும் கட்சிக்குத் துணைபோகும் அவலம் தொடருமா?” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.