உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர் பதவி காலம் ஆறு மாதம் நீட்டிப்பு செய்வது தொடர்பான சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் தயாரானது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக தடைபட்டது. இதனிடையே உள்ளாட்சித்தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, உள்ளாட்சி தேர்தலை நடத்தினால், கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவித்தனர். தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளதாகவும், இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு விசாரிக்கலாம் என்றும் கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் தமிழகத்தில் ஊராட்சி, பேரூராட்சி நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் தனி அலுவலர்களின் பதவி காலத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கான சட்டமுன் வடிவை தமிழக சட்டப் பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை, நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என். நேரு தாக்கல் செய்தார். 

ஊராட்சிகள் திருத்த சட்டமுன்வடிவை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பண் சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தினார். கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் தனி அலுவலர் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாக மசோதாவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தனி அலுவலர்களின் பதவி காலத்தை, இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கும் மசோதா தமிழக சட்டமன்றத்தில், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதி நிலை நிர்வாகத்தில் பொருளாதார பொறுப்புடமை திருத்த சட்ட மசோதாவும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.