like dengue government was inactive in rain precautionary activities says ttv dinakaran

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் கோட்டை விட்டது போல், மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் கோட்டை விட்டு விட்டது தமிழக அரசு என்று குற்றம் சாட்டியுள்ளார் டிடிவி. தினகரன்.

ஏற்கெனவே டெங்கு பாதிப்பில் தினந்தோறும் உயிர்ப்பலி நிகழ்ந்து கொண்டிருந்த போது, தமிழக அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அரசு இயந்திரம் முடங்கிப் போய் இருக்கிறது என்றும் தமிழக அரசையும் முதல்வரையும் சரமாரியாகக் குற்றம் சாட்டிப் பேசி வந்தார் டிடிவி தினகரன். இந்நிலையில் இப்போது, வடகிழக்குப் பருவ மழை துவங்கி, தமிழகமெங்கும் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை நீர் பெருகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி மக்களுக்கு பெரும் சிரமத்தைத் தந்துள்ளது. 

இதனிடையே, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுத் தரப்பு மேற்கொள்ளவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. புதன்கிழமை நேற்று சென்னை கொடுங்கையூரில் மின்சாரக் கசிவு காரணமாக இரு சிறுமிகள் உயிரிழந்தனர். இதற்கு மின் வாரிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என்ற விமர்சனம் எழுந்தது. இதற்கு டிடிவி தினகரனும் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தஞ்சாவூரில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த டிடிவி தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “அச்சப்பட்டது போலவே மழைக் காலத்தில் உயிர்ப் பலிகள் நிகழ ஆரம்பித்துள்ளன. இனியாவது அரசு விழித்துக் கொண்டு உயிர்ப் பலிகள் நேரா வண்ணம் செயல்பட வேண்டும்” என்று கூறினார்.