Parag agarwal இந்தியாவின் திறமைசாலிகள்... பயன்படுத்தாதது யாருக்கு பாக்கியம்..?
ஆப்ரிக்கர்களை துப்பாக்கி முனையில் பிடித்து சென்று அடிமைகளாய் விற்றவன் இந்திய இனங்களை வஞ்சகமாய் அவர்களுக்கு தெரியாமலே தன் காலுக்கு வரும்படி தன் கைகூலிகளால் அடித்து அடிமையாக்கி இருக்கிறான்
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா, ஐபிஎம் நிறுவனத்தின் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா, அடோப் நிறுவனத்தின் சிஇஓ சாந்தனு நாரயேன், பெப்சி நிறுவனத்தின் இந்திரா நூயி, டிவிட்டரின் சிஇஓ பராக் அகர்வால் என மிகப்பெரிய உலக ஆளுமை கொண்ட நிறுவனங்களில் இந்தியர்கள் உயர் பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.
\
ஆனால், அவர்கள் உழைப்பும் திறமையும் இந்தியாவுக்கு பயன்படாமல் போய்விட்டது என வேதனை தெரிவித்துள்ளார் பிரபல எழுத்தாளர் ஸ்டேன்லி ராஜன். இதுகுறித்து அவர், ‘’வெள்ளையன் வருமுன் எல்லா மக்களும் இந்தியாவில்தான் ஒழுங்காக உழைத்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த இந்தியா செல்வந்த நாடாயும் உலகின் மிகபெரிய பணக்கார நாடாகவும் இருந்தது. அலெக்ஸாண்டர் முதல் வாஸ்கோடகாமா வரை அதை தேடித்தான் வந்தார்கள். அப்படி வந்த ஆப்கானிய இனம் இங்கு ஆளவும் ஆரம்பித்தது. ஆப்கானிய ஆட்சியில் கூட இந்திய வளமானதாகத்தான் இருந்தது. காரணம் இந்தியாவின் மானிட வளம் அதை தாண்டி செல்லவில்லை செல்ல அவசியமுமில்லை சென்றாலும் சுல்தான்கள் விடுவதுமில்லை.
ஆப்கானியர் ஆளும் இந்தியாவினை நாங்களும் ஆண்டால் என்ன என அமர்ந்துவிட்டான் வெள்ளையன். அதுவரை இந்திய செல்வங்கள் எப்பொழுதாவதுதான் கொள்ளை போகும், கஜினி, தைமூர் நாதிர்ஷா என வெகு சொற்ப கொள்ளையர்தான் அவர்கள் நாட்டுக்கு அடித்து செல்வார்கள் மற்றபடி இங்கேயேதான் இந்திய செல்வம் சுற்றிகொண்டிருக்கும். பனி பாலைவனமாய் இருந்த ஐரோப்பாவில் இருந்து பிழைக்க பல்லாயிரம் மைல் கடல்தாண்டி வந்த அந்த பராரி கூட்டத்துக்கு இதெல்லாம் பொக்கிஷமாக தெரிந்தது கப்பல் கப்பலாக அள்ளி சென்றார்கள், பிரிட்டனில் குபிர் பணக்காரர் உருவானதெல்லாம் இக்காலத்தில்தான்.
ஒரு கட்டத்தில் இந்திய செல்வத்தையெல்லாம் சுருட்டிய வெள்ளையன் கடைசியில் இந்தியாவின் ஆகசிறந்த மனித வளங்களை சுருட்ட திட்டமிட்டான்
இவர்கள் இருக்குமிடம் செழிக்கும் என தேர்ந்த திட்டமிட்ட அவனின் கண்ணில் பிராமணர், சீக்கியர், தமிழர் என வெகுசில இனங்கள் பட்டன. அதுவரை தமிழனுக்கு கடல்தாண்டு அவசியமில்லை, சென்றாலும் கம்பீரமான வியாபாரியாகத்தான் சென்றான். உழைப்பில் தமிழனுக்கு ஈடு இல்லை அவனை எப்படி கடத்தலாம் என திட்டமிட்டவனுக்கு சாதி ஒழிப்பு, சமதர்ம தாளிப்பு, புரட்சி புண்ணாக்கெல்லாம் கைகொடுத்தன , அதுவரை அதாவது பல லட்சம் ஆண்டு கேட்காத குபீர் குரலெல்லாம் புரட்சி என கேட்டன. இதன் முடிவு என்னாயிற்று?
உழைக்கும் தமிழனை கப்பல் கப்பலாக பர்மா, இலங்கை, மலேயா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்ரிக்கா என அள்ளி சென்றான் வெள்ளையன்
அதற்கு சில பஞ்சங்களையும் காரணம் காட்டினான் அதற்கு முழு காரணம் யாரென்றால் அவனே பலவிதமான அரசியல் குழப்பம், குபீர் திராவிட நாத்திக இம்சை குழப்பம் என சொல்லி சொல்லி அவர்களை வெளியேற்றினான். சீக்கிய இனத்தை அவன் கையாண்ட விதமே அலாதி. இந்திய ஆட்சியாளர்களிடையே சீக்கியர் விரோதத்தை அழகாக செய்தான். அதை பாகிஸ்தான் இந்தியா என வெள்ளை அடிமை கூட்டமும் தொடர்ந்தது, சீக்கிய இனம் லண்டன் முதல் கனடா வரை செழித்தது.
இதில் ஈழ தமிழரையும் குறிவைத்தான் வெள்ளையன், ஈழதமிழரின் கல்வியும் அவர்களின் உழைப்பும் அவனை கவர்ந்தன, சும்மா வெளிநாடு அழைத்தால் வருவானா யாழ்பாணத்தான்? அவன் என்ன திராவிட தலைவர்களா?உடனே சொந்தமண்ணை விட்டு ரயில் ஏறி சென்னைக்கு ஓட யாழ்பாணி முதலில் நகரவில்லை, அவனை சிங்களவனை தூண்டிவிட்டு அடித்தான் வெள்ளையன். யாழ்பாணத்தான். ஓடினான் பின் பிரபாகரன் அதை சரியாக செய்தான். வெள்ளையன் அபிமான இனமாக பிராமண சமூகம் இருந்தது, அவர்களின் பக்தியும் லஞ்ச லாவண்யமில்லா நேர்மையும் தொழில் சுத்தமும் கூரிய அறிவும் அவனை ஆச்சரியபடுத்தின.
இந்த அறிவான இனம் இந்தியாவுக்கு எதற்கு? என சில கைதடிகளுக்கு கண் காட்டினான் அவைகள் புரட்சி என ஆடி தீர்த்து இடஒதுக்கீடு , சாதி ஒழிப்பு என பல நாடகங்களை நடத்தின. விளைவு பிராமண சமூகமும் இன்று வெளிநாட்டில் குவிந்தாயிற்று. இப்பொழுது ஐரோப்பா அமெரிக்கா என எடுத்து கொண்டால் அத்தேசங்கள் பிராமணனாலும், சீக்கியனாலும், யாழ்பாண தமிழனாலும் தாங்கி நிற்பது தெரிகின்றது. ஒரு நூற்றாண்டுக்கு முன் வெள்ளையன் செய்த மனித வள கடத்தல் இன்று மிக சரியாக அவர்களுக்கு பலனளிக்கின்றது. இந்த சமூகமெல்லாம் தங்கள் நாட்டில் தங்கள் மண்ணுக்கு உழைக்கவேண்டிய வளங்கள், அவர்களை இங்கே உரிய வாய்ப்பினை கொடுத்து அமர்த்தியிருந்தால் தேசம் என்றோ எழும்பியிருக்கும்.
வரலாற்றை ஆள படித்தால் தமிழகம் இந்தியா இலங்கை என யாரெல்லாம் புரட்சி , ஆட்சி இன்னும் பல குட்டிகர்ணம் அடித்து இன்று தலைவன், புர்ச்சியாளன் என பட்டத்தோடு சிலையாய் நிற்கின்றார்களோ எல்லோரும் வெள்ளையனின் கைகூலிகள் அவர்கள் வழியாகவே இந்திய மானிடவளம் கடத்தபட்டிருகின்றது என்பது நன்றாய் தெரியும்.
வெள்ளையனின் திட்டங்கள் எப்பொழுதும் தொலைநோக்கானவை இன்று பலன் கொடுக்கும் அத்திட்டத்தின் மூலத்தை தேடினால் எவ்வளவு வஞ்சகங்கள் சில கைகூலி அயோக்கியர்கள் மூலம் இங்கு விதைக்கபட்டு வெள்ளையனுக்கு நலமாய் அறுவடை செய்யபட்டது இன்னும் செய்யபட்டு கொண்டிருக்கின்றது என்பது புரியும். ஆப்ரிக்கர்களை துப்பாக்கி முனையில் பிடித்து சென்று அடிமைகளாய் விற்றவன் இந்திய இனங்களை வஞ்சகமாய் அவர்களுக்கு தெரியாமலே தன் காலுக்கு வரும்படி தன் கைகூலிகளால் அடித்து அடிமையாக்கி இருக்கிறான்’’ எனத் தெரிவித்துள்ளார்.