மின் தடையையே திமுக அரசின் டிரெயிலர்ன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க... அண்ணாமலை அட்டாக்..!
பெட்ரோல், டீசல் விலையை ரூ.5 முதல் ரூ.7 வரை குறைக்கலாம் என்று பாஜக மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் பாஜக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், “புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்பு விழாவில் ஆர்டிகிள் ஒன்றில் இடம் பெற்றுள்ள ‘யூனியன் ஆஃப் இந்தியா’ என்ற வார்த்தைகளைதான் ஆளுநர் தமிழிசை பயன்படுத்தியுள்ளார். அதற்கான விளக்கத்தையும் ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆனால், ஒன்றிய அரசு என்பதன் மூலம் திமுக சொல்ல வருவது என்ன? அதன் உள்ளர்த்தம் என்ன?
கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் திமுக தொடர்ந்து இடம் பெற்றிருந்தது. அப்போது அந்த வார்த்தையைப் பயன்படுத்தாதது ஏன்? கடந்த 10 ஆண்டுகளாக மின் உபரி மாநிலமாக தமிழகம் இருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக மின்தடை ஏற்படுவது ஏன்? அணிலால் மின் தடை ஏற்படுவது எனக் கூறுவப்படுவதையெல்லாம் ஏற்க முடியாது. இதுபோன்ற காரணங்கள் கூறுவதைத் தவிர்த்து மின்துறை அமைச்சர் தலையிட்டு, என்ன காரணம் என்பதைக் கண்டறிய வேண்டும்.
மின்தடையால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது. இதை திமுக அரசின் ட்ரெய்லர் என மக்கள் இப்போதே கூற ஆரம்பித்துவிட்டனர். இந்த அரசை விமர்சிக்க 6 மாத கால அவகாசம் அளிப்போம். சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் பற்றிய விவகாரத்தில் காங்கிரஸ் எந்தப் பதிலுமே சொல்லவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் பிராந்தியக் கட்சியாகவும் திமுகவின் பி டீமாகவும் செயல்படுகிறது. இந்த விஷயத்தில் அரசியல் எதுவும் வேண்டாம்.
பெட்ரோல், டீசல் விலையில் மாநில அரசுக்கு ரூ.37 முதல் ரூ.39 வரை வரி வருவாய் கிடைக்கிறது. எனவே ரூ.5 முதல் ரூ.7 வரை விலையைக் குறைக்கலாம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பெட்ரோல் டீசல் விலையைக் கடன் பத்திரங்கள் பெற்றுக் குறைத்தார்கள். அதற்கான அசல் மற்றும் வட்டியான ரூ.1.10 லட்சம் கோடியைத் தற்போது பாஜக அரசுதான் செலுத்தி வருகிறது. நீட் கிடையாது என்றார்கள் திமுகவினர். அதன்பின் தேர்வு இருக்கலாம் என்றார்கள். தற்போது இருக்கும் என்கிறார்கள். இதனால் மாணவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பாஜக தயாராக உள்ளது” என்று அண்ணாமலை தெரிவித்தார்.