நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரட்டும்.. அதை மட்டும் செஞ்சா அதிமுகதான் ஜெயிக்கும்.. சவால்விடும் மாஜி அமைச்சர்!
அடுத்த வரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும். அப்படி நேர்மையாக நடத்தினால் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றிபெறும் என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடியில் கே.சி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுகவின் பொன் விழா நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவிலிருந்து வேறு கட்சிகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் அதிமுகவுக்கே திரும்பி வருகிறார்கள். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நினைவிடம் சென்றதெல்லாம் பெரிய விஷயமே இல்லை.
மெரினாவுக்கு அவர் சென்றதை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அதிமுகவில் எப்போதுமே சசிகலாவுக்கு இடம் கிடையாது. இது கட்சியின் உறுதியான முடிவாகும். அதிமுகவை வழிநடத்தி செல்வதற்கு ஓபிஎஸும் ஈபிஎஸும் இருக்கிறார்கள். தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயகத்துக்கு எதிராக நடந்து முடிந்துள்ளது. ஆளும் திமுக பல சூழ்ச்சிகளைச் செய்து தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. இதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பல இடங்களில் வாக்குப்பெட்டிகள் உடைக்கப்பட்டு, திமுகவினர் வாக்குப்பெட்டிகளையே மாற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. எனவே, அடுத்த வரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும். அப்படி நேர்மையாக நடத்தினால் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றிபெறும். இந்த தேர்தல் முடிவால் அதிமுக சோர்ந்து போகவில்லை. எப்போதும் போலவே உற்சாகத்துடன் இருக்கிறோம். அடுத்த வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது” என்று கே.சி.வீரமணி தெரிவித்தார்.