தேர்தல் ரிசல்ட் வரட்டும்... அதிமுக என்ற கட்சியே இருக்காது... திருமாவளவன் தாறுமாறு கணிப்பு..!
இந்தத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் அதிமுக என்ற ஒரு கட்சியே இருக்காது. அதிமுக தலைவர்கள் பாஜகவில் இணைந்து விடுவார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இந்தச் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு வழக்கமான, சராசரியான தேர்தல் கிடையாது. திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையே நடக்கும் அதிகார போட்டிக்கான தேர்தல். திமுக கூட்டணி தேர்தலுக்காக உருவான கூட்டணி கிடையாது. பாஜக தமிழகம் உள்ளே வராமல் தடுக்கவும் தமிழகத்தைப் பாதுகாக்கவும் உருவாக்கப்பட்ட கூட்டணி. பாஜகவுக்கு எதிரான யுத்தமே இந்தத் தேர்தல். எதிரணியில் 234 தொகுதிகளிலும் பாஜகதான் போட்டியிடுகிறது.
இன்று தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரும் தலைவர்களும் இல்லை. எனவே அதிமுக முதுகில் ஏறி சவாரி செய்து தமிழகத்தில் காலூன்றலாம் என்ற எண்ணத்தில் பாஜக செயல்படுகிறது. அவர்களுடைய எண்ணம் நிறைவேறக் கூடாது. பாஜகவை தமிழகத்திலிருந்து ஓடஓட விரட்ட வேண்டும். இந்தத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் அதிமுக என்ற ஒரு கட்சியே இருக்காது. அதிமுக தலைவர்கள் பாஜகவில் இணைந்து விடுவார்கள். தமிழகத்தின் எம்.பி.யாக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வைத்துள்ள லெட்டர் பேடில் மோடியின் படம் பெரிய அளவில் இருப்பதே இதற்கு சாட்சி.
பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலைதான் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் ஏற்படபோகிறது. வட மாநிலங்களில் பாஜகவின் பல கூட்டணி கட்சிகளுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. கடைசியாக புதுச்சேரியில்கூட என். ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை பாஜக விலைக்கு வாங்கியதை மறந்துவிடக் கூடாது. இந்தத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு கிடைத்த 6 இடம் என்பது முக்கியமல்ல. தமிழகத்தில் பாஜக காலூன்ற கூடாது என்பதே எங்களுடைய லட்சியம்.” என்று திருமாவளவன் பேசினார்.