மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வரட்டும்.. அதுக்கப்புறம் இதெல்லாம் அகற்றப்படும்... வேல்முருகன் அதிரடி..!
திமுக ஆட்சியில் அமர்ந்த பிறகு மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் பல்வேறு சட்டங்கள் அகற்றப்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி இடம் பெற்றது. அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் முடிந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வேல்முருகன் இன்று சந்தித்து பேசினர். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அரக்கோணம் சோமனூர் இரட்டை படுகொலை செய்தவர்கள் மன்னிக்க முடியாத மனித குலத்திற்கு எதிரானவர்கள். இந்தக் கொலைக்கு அதிமுக காரணம் என்பது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.
இந்தப் படுகொலையை யாரும் நியாயப்படுத்த முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்து கொள்கிறேன். இதற்கு தமிழக காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலில் திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறது என்பதை பல்வேறு அதிகாரிகள் சொல்லியதை நான் இங்கு கூற விரும்கிறேன். மு.க.ஸ்டாலின் நிச்சயம் ஆட்சியில் அமர்வார். திமுக ஆட்சியில் அமர்ந்த பிறகு மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் பல்வேறு சட்டங்கள் அகற்றப்படும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ முடியும்.