"அனைத்து கட்சி கூட்டத்தை அரசியல் ஆக்காதீங்க..." - கட்சித் தலைவர்கள் வேண்டுகோள்
விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி 25 ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக மக்கள் முழு ஆதரவு அளிக்க
வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திமுக சார்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது 22 ஆம் தேதி பொதுக்கூட்டம், 25 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம், மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்துதல், தேசிய பேரிடரால் பாதித்த மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நெல் கரும்புக்கு நியாய விலை உள்ளிட்ட 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டம் நிறைவுபெற்ற பின் ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களும் தனித்தனியாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், "அரசியல் சுயலாபத்திற்காக இக்கூட்டம் கூட்டப்படவில்லை.
விவசாயிகள் நலனுக்காக 25 ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்." இவ்வாறு கூறினார்.
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள் பிரதிநிதிகளை பிரதம் சந்திக்க மறுத்திருப்பது அவர்களை அவமானப்படுத்தியதற்குச் சமம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சாடினார்.
அடுத்ததாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், "அழைப்பை ஏற்று அனைத்து தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை சந்திப்பதில் பிரதமருக்கு என்ன சிக்கல் இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக டெல்லி சென்று விவசாய பிரதிநிதிகள் பிரதமரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்." இவ்வாறு கூறினார்.