முன்னாள் அமைச்சர் தங்கமணி மருமகன் மீது நில அபகரிப்பு புகார்.. மீட்டு தரக்கோரி கதறும் உரிமையாளர்..!
சொத்தின் வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் அவருக்கு ரூ.20 லட்சத்து 39 ஆயிரம் மட்டும் கொடுத்துவிட்டு நிலத்தை திருப்பூா் தொட்டிபாளையம் சாா்பதிவாளர் அலுவலகத்தில் கிரயம் செய்துவிட்டார்கள். பின்னர் கடனை செலுத்தியவுடன் நிலத்தை சஞ்சய்குமார் ரெட்டி பெயரில் திருப்பி கிரயம் செய்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்
கடனாக பெற்ற 50 லட்சம் ரூபாய் பணத்திற்காக, 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மற்றும் கட்டிடத்தை அபகரித்துக் கொண்டதாக, முன்னாள் அமைச்சர் தங்கமணி மருமகன் மற்றும் அவரது உறவினர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வழக்கறிஞர் விஜயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சஞ்சய்குமார் ரெட்டி. வெளிநாடு வாழ் இந்தியரான இவருக்கு திருப்பூர் தெற்கு வட்டம் கண்டியன் கோவில் கிராமத்தில் 2.26 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், அவர் பண்ணை வீடு கட்டி வந்துள்ளார். அப்போது கட்டுமானப் பணிகளுக்காக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷுடம் ரூ.50 லட்சம் கடன் கேட்டுள்ளார். அப்போது தினேஷ் அவரின் உறவினர்கள் கே.ஆா்.தங்கராஜ் மற்றும் எஸ். ஹரிபாஸ்கர் பெயரில் நிலத்தை கிரயம் செய்து கொடுத்தால் கடன் கொடுப்பதாகக் கூறியுள்ளாா். இதற்கு சஞ்சய்குமார் ரெட்டி ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, சொத்தின் வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் அவருக்கு ரூ.20 லட்சத்து 39 ஆயிரம் மட்டும் கொடுத்துவிட்டு நிலத்தை திருப்பூா் தொட்டிபாளையம் சாா்பதிவாளர் அலுவலகத்தில் கிரயம் செய்துவிட்டார்கள். பின்னர் கடனை செலுத்தியவுடன் நிலத்தை சஞ்சய்குமார் ரெட்டி பெயரில் திருப்பி கிரயம் செய்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
இதனிடையே காங்கயம் பகுதியில் உள்ள ஒருவர் அந்த நிலத்தை மூன்றாம் நபருக்கு பேசி விற்பனை செய்ய முயன்றுள்ளார்.. இதனிடையே கடனை திருப்பி செலுத்தி விடுகிறேன் நிலத்தை மீண்டும் என் பெயரில் கிரயம் செய்து கொடுக்க வேண்டும் என சஞ்சய்குமார் ரெட்டி தினேஷிடம் கேட்டு உள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இந்நிலையில் கிரயப்பத்திரத்தை ரத்து செய்யக் கோரி திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வதை தடுக்க கோரியும், நிலத்தை மீட்டு தரக்கோரியும் பதிவுத்துறை துணை தலைவா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.