மூஞ்சியில மரு ஒட்டிக்கினு, கபாலி லுங்கி கட்டிக்கினு! ரகசியமா வா நைனா: கோட்டையை முற்றுகையிடும் ஆசிரியர்களின் செம்ம ஜெகஜெகா திட்டங்கள்!
நாளை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட முடிவு செய்துள்ளது ஜேக்டோ - ஜியோ. இதற்காக இன்றும், நாளையும் சென்னையை நோக்கி மாநிலமெங்கும் இருந்து அரசு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் படையெடுக்க இருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த முற்றுகை முயற்சியை முறியடித்திட அரசு தரப்பு மிக கடுமையாக முயன்று வருகிறது. இதனால் ‘முன்னெச்செரிக்கை நடவடிக்கை’ எனும் பெயரில் தமிழகமெங்கும் போராட்ட சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கும் ஆசிரியர் குழுக்கள் ‘நாங்களென்ன ரெளடிகளா? பந்த் நேரத்தில் முன்னெச்சரிக்கையாக கைது செய்வது போல் செய்கிறீர்களே?’ என்று பாய்ந்து வருகின்றனர்.
இது ஒரு புறம் போய்க் கொண்டிருக்க. எப்பாடுபட்டாவது கோட்டையை முற்றுகையிட்டு, போராட்டத்தை நடத்தியே தீருவது என்பதிலும் ஜேக்டோ ஜியோ குறியாக இருக்கிறது. இதனால் தனது உறுப்பினர்களுக்கு வாட்ஸ் அப்பில் சில ரகசிய தகவல்களை உத்தரவு மற்றும் யோசனைகளாக அனுப்பியுள்ளது.
அந்த ரகசிய உத்தரவுகளில் ஹைலைட்டான சில...
* சென்னைக்கு கார் மற்றும் வேன்களில் வராமல் பஸ், ரயிலிலேயே வாருங்கள். இதன் மூலம் சென்னையின் எல்லையிலோ, உங்களின் மாவட்ட எல்லைகளிலோ போலீஸ் மடக்குவதை தவிர்க்கலாம்.
* அரக்கோணத்தில் ரயில்வே பணி நடப்பதால் பல ரயில் அட்டவணையில் குழப்பமுள்ளது. எனவே பஸ் பெட்டர். அதிலும் ஏஸி ஸ்லீப்பர் பஸ்ஸில் கூலாக வந்துவிடலாம் கோயம்பேடுக்கு.
* பேருந்து நிலையத்திலோ, ரயில்வே ஸ்டேஷனிலோ குழுவாக செல்லாமல் இருவராகவோ, தனித்தனியாகவோ செல்லுங்கள். இதன் மூலம் போலீஸால் உங்களை கண்டுபிடிக்க முடியாது.
* ஆசிரியர் என்று காட்டிக் கொள்ளும் வகையில் டிரெஸ் அணியாமல் சாதாரணமான உடைகளில் வாருங்கள், இதனால் போலீஸிடமிருந்து தப்பலாம்.
* சக ஆசிரியரோ, ஆசிரியர் டீமோ போலீஸால் மடக்கப்பட்டு, தடுக்கப்பட்டால் தயவு செய்து அவர்களை காப்பாற்ற சென்று நீங்களும் மாட்டிக் கொள்ளாதீர்கள். அவர்களின் கண்ணிலேயே படாமல் எஸ்கேப் ஆகிவிடுங்கள்.
* போலீஸிடம் சிக்கிக் கொண்ட ஆசிரியர்கள் சக ஆசிரியர்களை தயவு செய்து உதவிக்கு அழைக்காதீர்கள்.
* வாட்ஸ் அப்பின் ஸ்டேட்டஸிலும், ஃபேஸ்புக்கிலும் நாம் சென்னையில் நடத்தப்போகும் முற்றுகை பற்றி எதுவும் எழுதாதீர்கள். எல்லாம் ரகசியமாய் நடக்க வேண்டும்.
* நாளை நாம் எங்கு, எப்போது சந்திப்போம் என்று நாளை காலையில் தெரிவிக்கப்படும். எல்லாம் ரகசியம், ரகசியம்.
- என்று இருக்கிறது.
போலீஸின் மடக்குதலில் இருந்து தப்புவதற்காக ஆசிரியர்கள் போடும் ரகசிய திட்டங்கள் சிலிர்க்க வைக்கின்றன போங்கள். நல்ல வேள! மூஞ்சியில மரு ஒட்டிக்கினு, கட்டம்போட்ட லுங்கி கட்டிக்கினு கபாலியாட்டமா வா நைனான்னு சொல்லாம வுட்டாங்களே!