உத்தேச பட்டியலுடன் டெல்லி பறந்தார் எல். முருகன்.. பாஜக வேட்பாளர் பட்டியல் இன்றோ, நாளையோ வெளியாக வாய்ப்பு.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தான் விரும்பிய தொகுதிகளை பாஜக கேட்டு பெற்றுள்ள நிலையில், அதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான பணியில் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
தமிழக பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் உத்தேச பட்டியலுடன் டெல்லி சென்றுள்ளார். அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி நட்டா சந்திப்புக்கு பிறகு பட்டியல் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையம் தீவிரம்காட்டி வருகின்றன. அதிமுக-திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை இறுதி செய்து வேட்பாளர் பட்டியலையும் வெளியிடுவதில் தீவிரம் காட்டி வருகின்றன.
சித்தாந்த ரீதியாக திமுகவை கடுமையாக எதிர்க்கும் பாஜக, அதிமுகவுடன் கைகோர்த்து தேர்தலை சந்திக்க உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கடந்த நான்கரை ஆண்டு காலமாக அதிமுக ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த பாஜக, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தாலும், தேர்தல் மூலம் தமிழகத்தில் தனக்கென தனித்துவத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் பாஜக முக்கிய தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு அதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றனர். தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி அதிமுகவிடம் வெற்றி வாய்ப்புள்ள 20 தொகுதிகளை பெற்றுள்ள பாஜக அதில் வெற்றிபெறும் வகையில் வேட்பாளர்களை களமிறக்குவதில் கவனம் செலுத்து வருகிறது.
அந்தவகையில் பாஜகவுக்கு, நாகர்கோவில், விளவங்கோடு, குளச்சல், மொடக்குறிச்சி, ராமநாதபுரம், ஆயிரம் விளக்கு, துறைமுகம், திருக்கோயிலூர், திட்டக்குடி (தனி), கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, உதகமண்டலம், திருவையாறு, திருநெல்வேலி, தளி, தாராபுரம் , காரைக்குடி, மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளை பெற்றுள்ளன. இதேபோல் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடவுள்ளார். 20 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக களம் காண உள்ள நிலையில், அதில் போட்டியிடுவதற்கான ஆர்வம் பாஜக தொண்டர்கள் மத்தியில் எப்போதும் இல்லாத அளவிற்கு மேலோங்கியுள்ளது. இந்நிலையில் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் என சமீபத்தில் உத்தேச பட்டியல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது ஆனால் அது அதிகாரப்பூர்வமான பட்டியல் அல்ல எனவும், அதை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அக் கட்சி விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தான் விரும்பிய தொகுதிகளை பாஜக கேட்டு பெற்றுள்ள நிலையில், அதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான பணியில் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பாஜக வேட்பாளர்களை இறுதி செய்வது தொடர்பாக மாநில தலைவர் எல். முருகன் டெல்லி விரைந்துள்ளார். அவருடன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்ர கேசவ விநாயகம் ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஜேபி நடா சந்திப்புக்கு பின்னர் இன்று மாலையோ அல்லது நாளையோ வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.