குஷ்புவுக்கு கால்ஷீட் பேட்டா..! நமீதா, ராதாரவிக்கு அல்வா.. நொந்து போன நட்சத்திர பேச்சாளர்கள்..
தேர்தல் வந்துவிட்டாலே இந்த நட்சத்திர பேச்சாளர்களுக்கு டிமாண்ட் அதிகமாகிவிடும். ஆளாளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு அவர்களை தங்கள் தொகுதியில் வந்து பிரசாரம் செய்ய சொல்லி புக் செய்வார்கள்
பிரசாரம் நேற்றே முடிந்த நிலையில், ஒரு நட்சத்திர புகைச்சல் ஒன்று இப்போது வெளியே வந்துள்ளது. இதன் மூலம் இனி வரும் தேர்தல்களில் நடிகர்களை பிரசாரத்துக்கு அரசியல் கட்சியினர் அழைப்பார்களா? நடிகர்களும் நஷ்டப்பட்டு பிரசாரம் செய்ய வருவார்களா? எனும் நிலையே உருவாகியுள்ளது.
என்ன மேட்டர்?
அதாவது இப்பல்லாம் தேர்தல் வந்துட்டா போதும் சினிமா ஷூட்டிங்குகள், சீரியல் ஷூட்டிங்குகளுக்கு கஷ்டம்தான். ஏன்னா, நடிகர்களில் பாதி பேர் பல கட்சிகளின் ‘நட்சத்திர பேச்சாளர்களாக’ இருக்கிறார்களே, அவர்கள் பிரசாரத்துக்காக ஊர் ஊராக ஊர்வலம் கிளம்பிவிடுவார்களே! அதனால்தான். எந்த தொகுதியில் எந்த வேட்பாளர் நிற்கிறார் என்று கூட தெரியாது. இவர்கள் போய் இறங்கியதும், ஷூட்டிங்கில் டயலாக் ஷீட் போல, அந்த தொகுதி வேட்பாளர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் தரப்படும். அதை பார்த்துவிட்டு வழக்கம்போல் அடிச்சு விடுவார்கள். இவர்களின் பேச்சை கேட்பதற்காக அல்ல, இந்த நடிகர் நடிகைகளை நேரில் பார்ப்பதற்காகவே கூட்டம் கூடும், அதன் மூலம் அக்கட்சிக்கு மாஸ் ஏறலாம், அதன் மூலம் சில வாக்குகளும் விழலாம். எனும் நப்பாசைகள்தான்.
இப்படி பிரசாரம் செய்யப் போவதன் மூலம் இந்த நடிகர் நடிகைகளுக்கு என்ன லாபம்? என நீங்கள் கேட்கலாம். அந்த நடிகர், நடிகையின் மார்க்கெட் நிலவரத்தை பொறுத்து அவர்களுக்கான ஒரு நாள் பேட்டாவை தலைமை கழகம் நிர்ணயிக்கும். இது போக இத்யாதி செலவுகளையும் அந்த வேட்பாளரோ, மாவட்ட நிர்வாகிகளோ கவனிக்க வேண்டும்.
கட்சி காசில் ஊர் சுற்றுவது மட்டுமில்லாமல், அதற்காக வருமானமும் கிடைப்பதால் நடிகர் நடிகைகள் தமிழக மண்ணில் ஊறிப்போன திராவிட கட்சிகளில் போட்டி போட்டுக்கொண்டு இணைந்திருக்கிறார்கள். இது மட்டுமில்லாமல் பி.ஜே.பி.யிலும் கணிசமாக பல பவுடர் முகங்கள் இருக்கின்றன.
பொதுவாக தேர்தல் வந்துவிட்டாலே இந்த நட்சத்திர பேச்சாளர்களுக்கு டிமாண்ட் அதிகமாகிவிடும். ஆளாளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு அவர்களை தங்கள் தொகுதியில் வந்து பிரசாரம் செய்ய சொல்லி புக் செய்வார்கள். இதனால் பிரசார காலங்கள் முடிகையில் இந்த நடிகர், நடிகைகளின் வங்கி கணக்கு சும்மா கும்முன்னு ஏறி நிற்கும்.
ஆனால் இந்த கூத்தெல்லாம் கடந்த சட்டமன்ற தேர்தல் வரையில்தான். இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அப்படி நட்சத்திர பேச்சாளர்களை பெரிதாய் எங்குமே காணமுடியவில்லை. தி.மு.க. தலைவரின் மகனும், சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வுமான உதயநிதியே மிக முக்கிய நடிகர் என்பதால் அவரது பிரசாரமே ‘செம்ம ஸ்டார் பிரசாரம்’ என்றாகிப் போனது அக்கட்சிக்கு.
மக்கள் நீதி மய்யம் பற்றி சொல்லவே வேண்டாம். தலைவரே உலக நாயகன் என்பதால் வேறு யாரின் தயவும் தேவையில்லை.
அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகம் உத்தரவிட்டும் கூட எந்த மாவட்டமும் நட்சத்திர பேச்சாளர்களை பெரிதாய் பயன்படுத்தவில்லை. காரணம், ‘இருக்குற செலவுல அவங்களுக்கு வேறயா? அவங்களாலே பெரிய பிரயோசனமும் இல்லை. அந்த பணத்தை மக்களுக்கு கொடுத்தாலாச்சும் நாலு ஓட்டாவது விழும்.’ என்று ஒரே போடாக போட்டு ஒதுக்கிவிட்டனர்.
அப்படியே கொஞ்சம் கமலாலயம் பக்கம் விசாரித்தோம். பி.ஜே.பி மட்டும் கொஞ்சம் விதிவிலக்கானது. அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களான நமீதா, ராதாரவி, கங்கை அமரன் போன்றோர் ஊர்வலம் வர தயாராக இருந்தார்கள். ஆனால், குஷ்புவுக்கு மட்டும் பெரிய வாய்ப்பு கிடைத்தது. அதுவும் டெய்லி அவருக்கான கால்சீட் கணக்கில் பணம் தர உத்தரவாம். அவரும் அதை வாங்கிக்கொண்டு பிரசாரம் செய்தார். ஆனால் மற்றவர்களை ‘அந்தந்த மாவட்ட தலைவர்கள் தருவதை வாங்கிக்கோங்க.’ என்று சொல்லி, மூக்குடைத்துவிட்டார்களாம். இதில் கடுப்பான மற்ற நட்சத்திரங்கள் டெல்லி வரை புகார் மனு அனுப்பியுள்ளனர். ஆனா எந்த பிரயோசனமும் இல்லையாம்!
ஆக இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் கிட்டத்தட்ட எல்லா கட்சிகளுமே ஸ்டார் பிரசாரத்தை தவிர்த்துவிட்டனர் பெருமளவில். இதனால் பாதகம் ஒன்றுமில்லை, வீண் செலவுதான் மிச்சம்! எனும் முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டால், எதிர்கால தேர்தல்களில் நட்சத்திர பரப்புரை என்பதே இருக்காது போல.