Kurangani fire accident prime minister tweet

குரங்கணி தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்திப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தீ விபத்தில் சிக்கியவர்களை போர்க்கால அடிப்படையில் மீட்ட மீட்புக்குழுவினருக்கு அவர் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடி அருகே மலை ஏற்ற பயிற்சிக்கு சென்றவர்களில் 10 பேர் காட்டுத்தீயில் உடல் கருகி பலி ஆனார்கள். காயம் அடைந்தவர்களுக்கு தேனி, மதுரை மற்றும் சென்னை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குரங்கணி தீ விபத்து குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. 

இந்த தீ விபத்தில் பலியான 10 பேர் குடும்பத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் செய்தி வெளியிட்டு உள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறேன் எனவும் குறிப்பிட்டு உள்ளார். 

மேலும் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களை காப்பாற்ற தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், விமானப்படை, கமாண்டோக்கள் மற்றும் உள்ளூர் மாவட்ட நிர்வாகத்தை பாராட்டுவதாகவும் பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.