கையில் ராஜினாமா கடிதத்துடன் முதலமைச்சர் குமாரசாமி ! பதவி விலக முடிவு !!
கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசுக்கு எதிராக இன்றைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் ரமேஷ் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து குமாரசாம் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.,க்களில் 15 பேர் அதிருப்தியடைந்து பதவியை ராஜினமா செய்தனர். தற்போது மும்பையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களை நாளை காலை 11 மணியளவில் தன் முன்னால் ஆஜராகுமாறு சபாநாயகர் சம்மன் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் குமாரசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து வருகிறது. இன்று வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வெள்ளியன்று சபையை ஒத்திவைக்கும் போது உறுதி அளித்ததுபோல நான் ஓட்டெடுப்பை இன்று நடத்துவேன் என்று சபாநாயகர் கூறியுள்ளார்.
ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு இல்லாததால் கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலாவை முதலமைச்சர் குமாரசாமி சந்தித்து ராஜினாமா அளிப்பார் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் விசாரணை செய்ய உள்ளதால் தீர்ப்பு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்தி வைகக வேண்டும் என்று என காங்கிரஸ் - மஜத கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. ஆனால் சபாநாயகர் இதனை ஏற்க மறுத்து வருகிறார்.
ஆனாலும் முதலமைச்சர் குமாரசாமி கையில் ராஜினாமா கடிதத்தை ரெடியாக வைத்துள்ளார் என தெரிகிறது.