செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவின் போது சென்னை வந்த பிரதமர் மோடிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன? பிரதமர் வருகையின் போது, மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளில் குறைபாடு இருந்துள்ளது. 

பிரதமர் மோடி வந்து சென்ற 4 மாதங்களுக்கு பிறகு திடீர் ஞானோதயம் ஏற்பட்டு நடவடிக்கை எடுக்க ஆளுநரை சந்தித்து தன் மலிவான அரசியலை அரங்கேற்ற அண்ணாமலை முயற்சிக்கிறார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை;- செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவின் போது சென்னை வந்த பிரதமர் மோடிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன? பிரதமர் வருகையின் போது, மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளில் குறைபாடு இருந்துள்ளது. பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய பாதுகாப்பு படையினர் மாநில அரசிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கு யார் காரணமோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக தனியாக விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். 

இதையும் படிங்க;- பிரதமர் தமிழகம் வருகையில் பாதுகாப்பு குறைபாடா..? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சைலேந்திரபாபு

அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டு பதிலளித்த டிஜிபி சைலேந்திர பாபு பாதுகாப்பு குறைப்பாடு குறித்து எந்த ஒரு அரசு துறையும் எங்கள் கவனத்திற்கு கொண்டுவரவில்லை. பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு தொடர்பான எந்த புகாரும் தமிழக காவல்துறையில் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு உபகரணங்கள் தணிக்கை செய்யப்படுகிறது உபயோகமில்லாத உபகரணங்கள் உடனடியாக தவிர்க்கப்படுகிறது. நூறு ஆண்டு காலமாக இதே நடைமுறைதான் காவல்துறையில் உள்ளது. தமிழக காவல்துறை தரமான பாதுகாப்பு உபகரணங்களை கையாளுகிறது. அந்தமான், கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் தமிழக காவல்துறையே பாதுகாப்புக்கு செல்வதாகவும் சைலேந்திர பாபு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மலிவான அரசியல் செய்ய முயற்சிக்கிறார் என கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க வந்த மோடிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்காததாக மத்திய பாதுகாப்பு ஏஜென்சி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாக ஒரு பொய்யான தகவலை அண்ணாமலை கூறி வருகிறார்.

இதையும் படிங்க;- நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லைனா? சாமானிய மக்களின் நிலை? கவர்னரிடம் புகார் கூறிய அண்ணாமலை..!

DGP சைலேந்திர பாபு அவர்களும் அது போன்ற எந்த கடிதமும் வரவில்லை என மறுத்திருக்கிறார். மோடி வந்து சென்ற 4 மாதங்களுக்கு பிறகு திடீர் ஞானோதயம் ஏற்பட்டு நடவடிக்கை எடுக்க ஆளுநரை சந்தித்து தன் மலிவான அரசியலை அரங்கேற்ற முயற்சிக்கிறார். கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு என்பது போல அண்ணாமலையின் புளுகு 8 மணி நேரம் கூட தாக்கு பிடிக்கவில்லை.