பொய் சொல்வது ஒன்று மட்டுமே பாஜகவின் தலைவர் முதல் தொண்டர் வரை பிழைப்பாக இருக்கு- சீறும் கேஎஸ் அழகிரி
6 மாதங்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட நிவாரணத் தொகையை, ஏதோ புயல் பாதித்த பிறகு தமிழ்நாட்டுக்கு வழங்கியதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த பாஜக முயல்வதாக கேஎஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
![KS Alagiri has said that the central government did not provide relief funds for the Chennai floods KAK KS Alagiri has said that the central government did not provide relief funds for the Chennai floods KAK](https://static-ai.asianetnews.com/images/01g2hfdv5smg589rprnhbe1rsm/cusersragupathi-rddocumentsmy-documentsmy-picsfex8tymveay6ocp-jpg--24-_363x203xt.jpg)
சென்னை வெள்ளம்- நிவாரண நிதி
மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு மத்திய அரசு சார்பாக எந்த ஒரு நிதியும் ஒதுக்கப்படவில்லையென காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பேரிடர் நிவாரண நிதியாக 7,532 கோடி ரூபாயை கடந்த 13.06.2023 அன்று 22 மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது . இதில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.450 கோடி ரூபாய் மட்டுமே. 6 மாதங்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட நிவாரணத் தொகையை,
ஏதோ புயல் பாதித்த பிறகு தமிழ்நாட்டுக்கு வழங்கியதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்தியில் ஆளும் மோடி அரசும், இங்குள்ள பாஜக எடுபிடிகளும் முனைந்திருக்கிறார்கள். 70 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக அதிக கனமழை பெய்து பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு இதுவரை நிவாரண நிதி ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை.
கிள்ளி கொடுக்கும் மத்திய அரசு
ஏற்கெனவே வழங்கப்பட்ட 450 கோடி ரூபாயை மிக்ஜாம் புயல் நிவாரணத்துக்கு பொய் கணக்கு காட்டுகிறார்கள். அதேசமயம், பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்துக்கு 812 கோடி ரூபாயும் மகாராஷ்ட்டிராவுக்கு 1420.80 கோடி ரூபாயும் வழங்கி பாரபட்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறது மோடி அரசு. குறைவான வரி வருவாயை மத்திய அரசுக்கு தரும் உத்தரப்பிரதேசத்துக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு, அதிக அளவு வருவாயைத் தரும் தமிழ்நாட்டுக்குக் கிள்ளித்தருவது மோடி அரசின் மோசடி அல்லவா? அரைவேக்காடு அரசியல்வாதியான தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையோ, இந்த உண்மை நிலவரத்தை மூடி மறைத்துவிட்டு, பொறுப்பற்ற முறையில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு மீது சுமத்திக் கொண்டிருக்கிறார்.
கோயபல்ஸ் பிரச்சாரம்
விஷன் 2047-ன் கீழ், பேரிடர் அபாயத்தைக் குறைக்கும் வகையில் மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், அகமதாபாத் மற்றும் புனே ஆகிய 7 பெருநகரங்களில் நகர்ப்புற வெள்ள அபாயத்தைக் குறைக்க 2,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டம் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி டெல்லியில் நடந்த மாநில பேரிடர் மேலாண்மை அமைச்சர்களுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, சென்னையில் நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டத்தை நிறைவேற்ற 561.29 கோடியை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்தது. நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டமும், மாநில பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடும் வெவ்வேறு.
450 கோடி ரூபாய் ஒதுக்கீடு மட்டுமே மிக்ஜாம் புயல் நிவாரணம் ஆகும். 561.29 கோடி ரூபாய் என்பது இனி வரும் காலத்தில் செய்யத் திட்டமிட்டுள்ள வெள்ள அபாய தடுப்புப் பணி திட்டத்துக்கான நிதியாகும், இந்த உண்மையை வேண்டுமென்றே மறைத்து அருவெறுக்கத்தக்க அரசியல் பிழைப்பைச் செய்வதற்காக, 1011.29 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது என்ற கோயபல்ஸ் பிரச்சாரத்தை தன் எஜமானர்களின் உத்தரவின்படி அண்ணாமலை மேற்கொண்டிருக்கிறார். மிக்ஜாம் புயல் இடைக்கால நிவாரண நிதியாக முதலமைச்சர் கேட்டது ரூ.5,060 கோடி ரூபாய்.
தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி
ஆனால் யானை பசிக்கு சோளப்பொறி போல் வெறும் 450 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழ்நாட்டை வழக்கம்போல் மத்திய அரசு வஞ்சித்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி என்பது போல், பொய் சொல்வது ஒன்று மட்டுமே பாஜகவின் தலைவர் முதல் தொண்டர் வரை பிழைப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்வதோடு, களப்பணியாற்றும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்தால் அண்ணாமலை போன்ற அரைவேக்காடுகளை மக்கள் முற்றிலும் நிராகரிப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்வதாக கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
சென்னை வெள்ள பாதிப்பு.! வாய்ஜாலம் காட்டுவதை விடுத்து நிவாரணப் பணிகளை முடுக்கி விடுக- அன்புமணி ஆவேசம்