"வீடியோவை கொடுத்தது நாங்கள்தான்; நான் அல்ல"! தினகரனுக்கு கிருஷ்ணபிரியா பதிலடி!
ஜெ. சம்பந்தப்பட்ட வீடியோவை, கிருஷ்ணபிரியாவிடம் இருந்து வாங்கவில்லை என்று டிடிவி தினகரன் கூறியதற்கு, விடியோவை கொடுத்தது நாங்கள்தான் என்று கூறினேனே தவிர நான் என்று சொல்லவில்லை என்று கிருஷ்ணபிரியா கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுத்த வீடியோ என்று டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ குறித்து பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். ஆர்.கே.நகர் தேர்தலை வைத்தே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாகவும் குற்றம் கூறப்பட்டு வந்தது.
இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, தற்போது வெளியான ஜெ. வீடியோவை, முதலில் கொடுக்க சொன்னதே நாங்கள்தான் என்று கூறியிருந்தார். மேலும் நாங்கள் கூறும்போது அதனை வெளியிடாமல், இப்போது அதனை வெளியிடுவது கீழ்த்தரமான செயல் என்றும் கிருஷ்ணபிரியா கூறியிருந்தார். அதுமட்டுமல்லாது வெற்றிவேல் துரோகம் இழைத்துள்ளார் என்றும் கூறியிருந்தார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் பேசும்போது, ஜெயலலிதா சம்பந்தப்பட்ட வீடியோவை, கிருஷ்ணபிரியாவிடம் இருந்து வாங்கவில்லை என்று கூறியிருந்தார். இது தொடர்பாக வார இதழ் ஒன்று, கிருஷ்ணபிரியாவிடம், உங்களிடம் இருந்து ஜெ. சம்பந்தப்பட்ட வீடியோவை வாங்கவில்லை என்று தினகரன் கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பியது.
அதற்கு பதிலளித்த கிருஷ்ணபிரியா, நான் மிகுந்த மனவேதனையுடன்தான் ஊடகங்களைச் சந்தித்தேன். அந்த சந்திப்பின்போது வீடியோவை கொடுத்தது நாங்கள்தான் என்று கூறினேனே தவிர நான் என்று கூறவில்லை என்றார். பெங்களூரு சிறையில் சசிகலாவை, நான், சகோதரி ஷகிலா, சகோதரர் விவேக் ஆகிய மூவரும் சந்தித்தோம்.
அப்போது, சசிகலா, ஜெ. மரணம் சம்பந்தமாக விசாரணை கமிஷனோ, வேறு எவ்விதமான விசாரணையே அமைக்க வேண்டுமோ என்று பேசி வருகிறார்கள். அதனால் வீடியோவை ஒரு காப்பி எடுத்து தினகரனிடம் கொடுத்து விடுங்கள். என்று கூறியிருந்தார். இதனை அடுத்து, விவேக், ஜெ. வீடியோ காப்பி ஒன்றை எடுத்து தினகரனிடம் கொடுத்தார்.
இதனால்தான் நாங்கள் என்று நான் கூறியிருந்தேன். என் கையில் இருந்து வாங்கினார் என்று நான் கூறவேயில்லை. வேண்டுமானால் ஊடகத்தில் பதிவு செய்ததை மீண்டும் பார்த்துக்கொள்ளலாம் என்றும் அந்த பேட்டியில் கிருஷ்ணபிரியா கூறியிருந்தார்.