சசிகலா ஒரு பணிப்பெண்..! முனுசாமி கடும் தாக்கு..!
இரட்டை இலை சின்னத்தை பெற்றதன்மூலம் ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையின் கீழ் செயல்படுவதே அதிமுக என்பது அதிகாரப்பூர்வமாகிவிட்டது. இதனால் அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அமைப்பு ரீதியாகவும் சட்டப்பேரவையிலும் அதிகமானோரின் ஆதரவு பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிக்கு இருப்பதாகவும் அதனால் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதாகவும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், இரட்டை இலை பெறப்பட்ட பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியிருப்பது, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் நிலை உருவாகியிருப்பதால் அதிமுகவினரின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.
இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ள அதிமுகவினர், முன்பைவிட தற்போது சற்று அதிகமாகவே தினகரனை தாக்குகின்றனர். அதிமுகவில் இனி அணிகள் என்பதே கிடையாது. ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் இயங்குவதுதான் அதிமுக. தினகரனுக்கு அதிமுகவுக்கும் தொடர்பே கிடையாது என்றெல்லாம் முழங்குகின்றனர்.
இந்நிலையில், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமியும் தன் பங்கிற்கு தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதிமுகவுடன் தினகரனை இணைத்தே பேசக்கூடாது எனவும் சசிகலா என்ற பணிப்பெண் மூலம் கட்சிக்குள் வந்தவர் தினகரன் என சசிகலாவை கடுமையாக விமர்சித்து முனுசாமி பேசியுள்ளார்.