"கோரிக்கையை ஏற்றால் பேச்சு....! இல்லைனா போச்சு" - கொந்தளிக்கும் கே.பி.முனுசாமி
தங்கள் தரப்பு கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் மட்டுமே எடப்பாடி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கே.பி.முனுசாமி கொந்தளித்துள்ளார்.
முதல் அமைச்சர் பதவியை விட சசிகலா குடும்பத்தை முழுவதுமாக விரட்டி அடிப்பதிலேயே தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறது ஓ.பி.எஸ்.அணி.
தினகரன் வெளியேறிவிட்டார். இனி எடப்பாடியும், பன்னீர்செல்வமும் அன்ட்கோ போட்டு நிலையான ஆட்சி அமைப்பார்கள் என்று எதிர்பார்த்தால், தாருமாறு ஸ்டேட்டஸைத் தட்டி விட்டு தெறிக்க விட்டிருக்கிறார் கே.பி.முனுசாமி.
அசரடிக்கும் அரசியல் டுவிஸ்டுகளுக்கும், அசாராத பிரேக்கிங் நியூஸ்களுக்கும் பழக்கப்பட்ட மக்களுக்கு தீனியாக அமைந்திருக்கிறது கே.பி.முனுசாமியின் கொந்தளிப்பு பேட்டி
என்னதான் சொன்னார் கே.பி.முனுசாமி... பலவீனமான இதயம் கொண்டவர்களும், கர்ப்பினி பெண்களும் விவேகத்துடன் முனுசாமியின் பேட்டியை படிக்கவும். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடனான ஆலோசனைக்குப் பிறகு அவரது இல்ல முகப்பில் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். ஆரம்பம் முதல் இறுதி வரை கேப் விடமால் நொறுக்கித் தள்ளிய முனுசாமி, சசிகலாவையும், டிடிவி தினகரனையும் லெப்ட் அன்ட் ரைட் வாங்கத் தவறவில்லை.
முதல் அமைச்சர் பதவியை நாங்க கேட்டமா என்று ஆரம்பத்திலேயே டாப் கியரைத் தட்டி ஸ்கோர் செய்த முனுசாமி, சசிகலாவையும், தினகரனையும் நீக்கிவிட்டதாக அறிக்கை அளித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை என்று அதிர வைத்தார்.
ஒருபடி மேலே போய் தேர்தல் ஆணையத்திடம் சசிகலா அளித்த பிரமாணப் பத்திரத்தை வாபஸ் பெற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த 30 பேரையும் கூண்டோடு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே. இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்ற எம்.ஜி.ஆரின் பாடல்களே தற்போது நினைவுக்கு வருகிறது.