"தம்பிதுரை, ஜெயகுமார் தான்தோன்றித் தனமாக பேசக்கூடாது" - குட்டு வைத்த கே.பி.முனுசாமி
அமைச்சர் ஜெயகுமார், தம்பிதுரை ஆகியோர் தங்கள் இஷ்டத்துக்கு பேசக்கூடாது என்றும், அப்படி அவர்கள் பேசும் பட்சத்தில் நாங்கள் மக்களை சந்தித்து வெற்றி பெற்றுக் கொள்வோம் என்று முன்னாள் அமைச்சர் கே.பி,முனுசாமி அதிரடியாக பேட்டி அளித்தார்.
அதிமுகவின் இரு அணிகள் இணைவது தொடர்பான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி ஒன்றில் பேசும் போது, இரு அணிகளும் இணைந்தால் எடப்பாடி தான் முதலமைச்சர் என கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த முனுசாமி, யார் முதலமைச்சர் என்ற கேள்வி எழாதபோது தம்பிதுரை இது போன்று பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
தம்பிதுரையை பொதுவாக யாருமே மதிக்க மாட்டார்கள் என்றும் அவர் இது போன்று தான் தோன்றித் தனமாக பேசக்கூடாது என்றும் எச்சரித்தார்.
அமைச்சர் ஜெயகுமார், அமெரிக்காவில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு தான் தான் காரணம் என ஓபிஎஸ் கூறிவார்…அதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்கக்கூடாது என்று பேட்டி ஒன்றில் கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்த கே.பி.முனுசாமி, அமைச்சர் ஜெயகுமார் யார்? எப்படிப்பட்டவர்? என்று எங்களுக்கு தெரியும். அவரும் பொது வெளியில் பேசும்போது நாகரீகமாக பேச வேண்டும் என தெரிவித்தார்.
இதே போன்று நேற்று வரை சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த அமைச்சர் உதயகுமார், இன்று விசுவாசம் என்றால் அதற்கு உதாரணம் ஓபிஎஸ் தான் கூறிவருகிறார். எப்படி அவரால் மாற்றிப் பேசமுடிகிறது என முனுசாமி கேள்வி எழுப்பினார்.