சாதியை முன்வைத்து தமிழகத்தை கூறுபோட்டால் அது பெரும் கேடாக முடிந்துவிடும்.. எச்சரிக்கும் டிடிவி. தினகரன்..!
எந்தத் தரப்பு மக்களிடமும் அப்படி ஒரு சிந்தனையோ, கோரிக்கையோ எழாத போது சுயலாபத்திற்காக தமிழர்களை சாதிரீதியாக கூறுபோட நினைப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது.
வெள்ளைக்காரர்களைப் போல பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல், வளர்ச்சியைப் பற்றி யோசிப்பதே புத்திசாலித்தனமாக இருக்க முடியும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் இடம்பெற்றார். மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்ட எல்.முருகனின் சுயவிபரப் பக்கத்தில், எல். முருகன், கொங்கு நாடு, தமிழ்நாடு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தமிழகத்தின் ஒரு பகுதியை கொங்குநாடு என மத்திய அரசே குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, தமிழகத்தை பிரித்து கொங்கு நாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக்குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம்.
எந்தத் தரப்பு மக்களிடமும் அப்படி ஒரு சிந்தனையோ, கோரிக்கையோ எழாத போது சுயலாபத்திற்காக தமிழர்களை சாதிரீதியாக கூறுபோட நினைப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது.
ஏற்கனவே, மொழிவாரி மாநிலப் பிரிவினையால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் இன்றுவரை தொடரும் நிலையில், சாதியை முன்வைத்து தமிழ்நாட்டைக் கூறுபோட்டால் அது தமிழினத்திற்கு பெரும் கேடாக முடிந்துவிடும். எனவே, வெள்ளைக்காரர்களைப் போல பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல், வளர்ச்சியைப் பற்றி யோசிப்பதே புத்திசாலித்தனமாக இருக்க முடியும் என பதிவிட்டுள்ளார்.