kodanu secret : கொடநாடு பங்களா ரகசியம்... இன்ஜினியர் சொன்ன அபாயம்... உண்மையை உடைக்கத் தயாராகும் சசிகலா..!
எஸ்டேட் பங்களாவின் ஜன்னல்களை உடைத்து கொள்ளை நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கான வாய்ப்புக் குறைவு.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான எஸ்டேட், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ளது. இந்த எஸ்டேட்டில் உள்ள பங்களாவில், கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின்போது அங்கு காவலாளியாக இருந்த ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். கொள்ளையர்கள் தாக்கியதில், மற்றொரு காவலாளியான கிருஷ்ணதாபா படுகாயம் அடைந்தார்.
இது தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.இதற்கிடையில் கொடநாடு வழக்கில் கூடுதலாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மறுவிசாரணை நடத்தி வருகிறார்கள். வழக்கு குறித்து முழு விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடையவர்களின் மரணம் அடுத்தடுத்து நடந்ததால், கொடநாடு சம்பவத்துக்கும், இதற்கும் தொடர்பு எதுவும் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்தது.தொடர் விசாரணை அடிப்படையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை கடந்த அக்டோபர் 25-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.
மேலும் புதிதாக கிடைக்கும் தகவல்களை கொண்டு வழக்கில் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 80-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கொடநாடு சம்பவம் தொடர்பாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கிடம் தனிப்படை போலீசார் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் விசாரணை நடத்தினர்.
3 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தெரிந்த தகவல்களை கூறுமாறு போலீஸ் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். கொடநாடு எஸ்டேட் மற்றும் நிர்வாகம் தொடர்பாகவும் தனிப்படையினர் கேட்டனர். இதில் சில விவரங்களை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை விவேக்கிடம் மீண்டும் ஒருசில நாட்களில் விசாரணை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதுவரை பலரிடம் விசாரணை நடத்திய போலீசார், இந்த வழக்கில் சசிகலாவின் குடும்பத்தினரிடம் விசாரணையை தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோடநாடு எஸ்டேட்டில் சசிகலாவும் பங்குதாரர் என்பதால், விரைவில் அவரும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்கிறார்கள்.
இதனிடையே, கோடநாடு பங்களா கொள்ளை தொடர்பாக தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய சசிகலா, “எஸ்டேட் பங்களாவின் ஜன்னல்களை உடைத்து கொள்ளை நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கான வாய்ப்புக் குறைவு. கோடநாடு பங்களா கடல் மட்டத்திலிருந்து 6,200 அடி உயரத்தில் உள்ளது. அதனால் இடி மின்னல் தாக்கும் அபாயம் இருப்பதாக பங்களாவை வடிவமைத்த இன்ஜினியர் சொன்னார். அதனால் எந்தக் கதவுக்கும் இரும்பைப் பயன்படுத்தி இருக்க மாட்டார்.
எனவே, கதவை உடைத்து கொள்ளையடிக்க வாய்ப்பே இல்லை. போலீஸார் என்னை விசாரணைக்கு அழைத்தால் எனக்குத் தெரிந்த தகவல்களை சொல்லத் தயாராய் இருக்கிறேன். உண்மையிலேயே இந்தச் செயலைச் செய்தவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள எனக்கும் துடிப்பாகத்தான் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.