Asianet News TamilAsianet News Tamil

கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்.. எடப்பாடி, சசிகலாவை விசாரிக்கக்கோரி புதிய மனு.!

கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்குத்தான் தெரியும் எனவும், புலன் விசாரணைக் குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும், முக்கியக் குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Kodanad case .. New petition to investigate Edappadi and Sasikala
Author
Chennai Central, First Published Aug 23, 2021, 7:06 PM IST

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் புதிய மனுதாக்கல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரைக் கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக, ஷோலூர் மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

Kodanad case .. New petition to investigate Edappadi and Sasikala

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி. முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன்,  கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சுனில் ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர், நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி அளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

Kodanad case .. New petition to investigate Edappadi and Sasikala

அதில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வரின் தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தைப் பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் நடந்த கொள்ளையில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்குத்தான் தெரியும் எனவும், புலன் விசாரணைக் குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும், முக்கியக் குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios