முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தைப் பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாகவும், ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு நடந்த கொள்ளை சம்பவத்தில் கொடநாடு எஸ்டேட்டில் இருந்து மாயமான பொருட்கள் குறித்து சசிகலா, இளவரசிக்கு மட்டும் தான் தெரியும் என்றும், புலன் விசாரணைக் குழு வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க கால அவகாசம் கேட்டதால் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை டிசம்பர் 10ம் தேதி ஒத்திவைத்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017, ஏப்ரல் 23-ம் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சோலூர்மட்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் கைதான தீபு, சதீஷன், சந்தோஷ்சாமி ஆகியோர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி. முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட்மேலாளர் நடராஜன், கூடலூர் சுனில் ஆகிய 9 பேரை சாட்சிகளாக விசாரிக்கக் கோரி, நீலகிரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இதையும் படிங்க;- Vaiko: அகரம்கூட தெரியாத அண்ணாமலை.. வாயை மூடிக்கொண்டு இருக்கலாம்.. பங்கமாய் விளாசிய வைகோ..!

அதை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி அளித்து. மற்றவர்களை விசாரிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமிஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தைப் பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாகவும், ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு நடந்த கொள்ளை சம்பவத்தில் கொடநாடு எஸ்டேட்டில் இருந்து மாயமான பொருட்கள் குறித்து சசிகலா, இளவரசிக்கு மட்டும் தான் தெரியும் என்றும், புலன் விசாரணைக் குழு வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும், முக்கியக் குற்றவாளிகளை தப்பவிட்டு விட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதையும் படிங்க;- அவங்களுடைய வஞ்சக வலையில் முதல்வர் ஸ்டாலின் ஒருபோதும் வீழ்ந்துவிடக் கூடாது.. எச்சரிக்கும் ராமதாஸ்..!

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக பதில் அளிக்க கால அவகாசம் வழங்க வேண்டுமென காவல் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.