சென்னை, அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் தங்கி சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி இன்று சென்னை வர உள்ளார்.

கடந்த 22 ஆம் தேதி உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை, பல்வேறு கட்சி தலைவர்கள் மருத்துவமனை சென்று உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஜெயலலிதா பூரண உடல்நலம் பெறவும் பலர் வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.
நேற்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, அப்போலோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். கேரள முதலரமைச்சர் பினரயி விஜயன், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய நாளை சென்னை வர இருக்கிறார். அவருடன் முக்கிய அமைச்சர்களும் வர உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, சென்னை வருகை தர உள்ளதாக தெரிகிறது. சென்னை வரும் அவர் முதலமைச்சர் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் அதிமுகவின் மூத்த தலைவர்களிடம் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிவார் என செய்தி வெளியாகியுள்ளது.
