என்னையும் மதிக்கல.. எங்க கட்சியையும் மதிக்கல.. நான் ஏன் வரணும்..? பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
லோக்பால் அமைப்பின் தேர்வுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளராக மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், அந்த அழைப்பை நிராகரித்து பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
லோக்பால் அமைப்பின் தேர்வுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளராக மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், அந்த அழைப்பை நிராகரித்து பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
லோக்பால் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தேர்வுக்குழுக் கூட்டத்தில் உறுப்பினராகச் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் போதுமான பலம் இல்லை. அதனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து வழங்கப்படாமல் தனிப்பெரும் கட்சியாக மட்டுமே உள்ளது.
இதனால், மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்க முடியாது என்பதால் அவரால் தேர்வுக்குழுவிலும் இடம்பெறமுடியாது. எனவே கார்கேவை சிறப்பு அழைப்பாளராக மட்டுமே மத்திய அரசு அழைத்திருந்தது.
ஆனால், மத்திய அரசின் இந்த அழைப்பை நிராகரித்து மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஊழல் கண்காணிப்பு அமைப்பான லோக்பாலுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் முக்கியமான பணியில் எதிர்க்கட்சிகள் இடம் பெற வேண்டும். ஆனால், என்னையும், எனது கட்சியையும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் சிறப்பு அழைப்பாளர் என்ற ரீதியில் மத்திய அரசு அழைத்து இருப்பது, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளை நிராகரிக்கும் ஒருங்கிணைந்த நடவடிக்கையாகும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை லோக்பால் சட்டத்தையும், அதற்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் பணியையும் நீர்த்துப்போகச் செய்து இருக்கிறது, இதை நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சிறப்பு அழைப்பாளர் என்ற ரீதியில் பங்கேற்க முடியாது என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.