தமிழக பெண்களை இழிவுபடுத்திப் பேசிய கேரள அமைச்சர்…விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….
இடுக்கி மாவட்டத்தில் தேயிலைத் தோட்ட தமிழ் பெண்களை இழிவாக பேசிய கேரள மின்சாரத் துறை அமைச்சர் எம்.எம்.மணியிடம் விசாரணை நடத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மின்துறை அமைச்சர் எம்.எம். மணி, இடுக்கி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, தொழிலாளர்கள் உரிமைகளுக்காக போராடிய தமிழ் பெண்களை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் கேரள சட்டசபையில் நேற்று புயலை கிளப்பியது. ஆனால் அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். இந்த நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் எம்.எம். மணிக்கு எதிராக கேரளாவை சேர்ந்த ஜார்ஜ் வட்டுகுளம் என்பவர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தில் ஈடுபட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை பேசக்கூடாத, ஆபாச வார்த்தைகளால் அவதூறாக அமைச்சர் மணி பேசி உள்ளார்.
இதேபோன்று அவர் பைனாவு அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் பெண் முதல்வரையும் அவதூறாக பேசினார். பின்னர் அவர் மன்னிப்பு கேட்டார். இப்படி பேசுவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.
அவர் மீது உயர்நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக பெண்களை அவதூறாக பேசிய அமைச்சர் மணியிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.